நகர்ப்புற தேர்தல் பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் பரபரப்பான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டுக்கோட்டை நகராட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மக்களிடம் அட்டை ஒன்றை அச்சிட்டு. வீடு வீடாக கொடுத்து அதில் குறைகளை எழுதி வாங்கி கொள்வதுடன், 100 நாள்களில் அந்த குறைகளை தீர்க்கப்படும் என கூறி பிரசாரம் செய்து வருகிறார்.

பட்டுக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 17வது வார்டில் திமுக சார்பில் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான ஆதி.ராஜேஷ்வரன் என்கிற ராஜேஷ், அதிமுக சார்பில் லதா பாஸ்கர் போட்டியிடுகின்றனர்.
இதில் ஆதி.ராஜேஷ் வித்தியாசமான முறையில் பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். அனைத்து பிரச்னைகளையும் நூறு நாளில் போர்கால அடிப்படையில் தீர்ப்பேன் என கூறி வாக்கு சேகரித்து வருகிறார். ராஜேஷ் வீடு வீடாக ஓட்டு கேட்டு செல்லும் போது எல்லோரிடத்திலும் அட்டை ஒன்றை கொடுக்கிறார். அதில் முதலமைச்சர் ஸ்டாலின்,உதயநிதி ஆகியோரின் படங்கள், உதயசூரியன் சின்னம், போடப்பட்டுள்ளது. அத்துடன் `உங்களில் ஒருவன்’ என தனது பெயரை, அச்சிட்டுள்ளார்.

அந்த அட்டையில் மக்கள் குறைகளை எழுதி கொடுப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் உங்களுக்கு என்ன குறை இருக்கோ அல்லது கோரிக்கை இருக்கோ அதனை எழுதி கொடுங்கனு கேட்டு வாங்கி கோரிக்கைகள் அனைத்தும் நூறு நாள்களில் போர்க்கால அடிப்படையில் தீர்க்கபடும் என்னை தேர்ந்தெடுங்கள் எனவும் அதற்காக காத்திருக்கிறேன் என ஒவ்வொருவரிடமும் சொல்ல, அவர்களும் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கோரிக்கைகளை எழுதி கொடுக்கின்றனர். வாக்குறுதிகள் கொடுத்தாலும் மக்களுக்கு என்னை தேவை என்பதை அறிந்து அதனை முதலில் செயல்படுத்துவதற்காக ராஜேஷ் இதனை செய்து வருவதாக திமுகவை சேர்ந்த அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஆதி.ராஜேஷிடம் பேசினோம், ``என்னுடைய 17வது வார்டு தொடர்ந்து மூன்று முறை அதிமுக வசம் இருந்தது. சாலை வசதி இல்லை, கழிவு நீர் தேங்கி நிற்கிறது... சொல்லப்போனால் பட்டுக் கோட்டையில் வளர்ச்சி இல்லாத வார்டாக இருக்கிறது. இந்த முறை முதலமைச்சர் ஸ்டாலின் எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியிருக்கிறார். நான் வெற்றி பெறுவதற்காக வேலை செய்து வருகிறேன். மாதம் தோறும் மக்கள் மத்தியில் கூட்டம் நடத்தி குறைகளை கேட்டு தீர்க்கப்படும், சிசிடிவி கேமரா அமைத்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்படும் என தொடக்கத்தில் வழக்கம் போல் வாக்குறுதிகளை அளித்து பிரசாரம் செய்தேன்.

அதன் பிறகு மக்களுக்கு என்ன தேவை அவங்க மனசுல என்ன இருக்கு என்பதை அறிந்து கொள்ள நினைத்தேன். இதற்காக மக்கள் குறைகளையும்,கோரிக்கைகளையும் எழுதி தரும் வகையில் அட்டை ஒன்றை அச்சிட்டு வீடு தவறாமல் கொடுத்தேன். அதில் அவர்களுக்கு என்ன தேவையோ அதனை எழுதி கொடுத்து வருகின்றனர். நான் வெற்றி பெற்றால் அவை அனைத்தும் நூறு நாட்களில் நிறைவேற்றி தரப்படும் எனவும் மக்களிடத்தில் கூறி வருகிறேன்.
முதலமைச்சர் ஸ்டாலின் `உங்கள் தொகுதியில் முதல்வர்’ உள்ளிட்ட பல செயல்களின் மூலம் மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அவருடைய செயல் பலதரப்பாலும் பாராட்டப்பட்டு வருகிறது. அவர் வழியில் மக்கள் பிரச்னையை அறிந்து விரைந்து தீர்ப்பதற்காக நான் இந்த ஐடியாவை செய்து வருகிறேன். இதற்கு மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்திருக்கிறது” என உற்சாகமுடன் தெரிவித்தார்.
மேலும் படிக்க `100 நாள்களில் பிரச்னைகள் தீர்க்கப்படும்!’ -ஸ்டாலின் பாணியில் குறைகளை எழுதி வாங்கும் திமுக வேட்பாளர்