சித்தபுருஷர்களின் வரலாறு அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்தது. பல ஆயிரம் சித்தர்கள் நம் மண்ணில் வாழ்ந்து மறைந்து இன்றும் சூட்சும ரூபமாய் அருள்பாலித்துவருகின்றனர். அப்படிப்பட்ட சித்தர்களில் ஒருவர்தான் முத்துவடுகநாத சுவாமிகள். சிவகங்கையை அடுத்த சிங்கம்புணரியில் இவரது ஜீவசமாதி உள்ளது. இங்கு முத்துவடுகநாத சுவாமி ஜீவசமாதியில் கோயில் எழும்பிய வரலாறே சிலிர்ப்பூட்டுவது.

கோயில் அமைந்த திருவிளையாடல்
சித்தர் மறைந்து சில காலங்கள் கழித்து அங்கு ஒரு கோயில் எழுப்பவேண்டும் என்று ஊர் மக்களுக்குத் தோற்றிற்று. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஊரில் இருந்த அனைவருக்குள்ளும் ஒரே நேரத்தில் அந்த ஆசை எழுந்தது. சித்தரின் விளையாடல்தான் என்று ஊர்மக்கள் நம்பினார்கள். பணிகள் தொடங்கின. அப்போது ஒரு நாள் கனமழை பெய்தது. மழையில் மண் அரிப்பு ஏற்பட ஜீவ சமாதியில் ஒரு சிறு ஓட்டை ஏற்பட்டது. விளையாட்டாக ஒரு சிறுமி சமாதியுள் என்ன இருக்கிறது என்று அந்தத் துளைவழியாகப் பார்த்தார். அந்த சிறுமிக்கு உடல் சிலிர்த்தது. சமாதியுள் ஒரு மகான் அமர்ந்து தியானம் செய்வதையும் அவர் கழுத்தில் மணம் வீசும் அழகிய மலர்மாலைகள் இருப்பதாகவும் விளக்கு ஒன்று சுடர்விட்டுப் பிரகாசிப்பதாகவும் கூறினாள்.
இதைக் கேட்ட ஊர் மக்களுக்குப் பெரும் வியப்பு. அது எப்படிப் பல ஆண்டுகளுக்கு முன்பு அடக்கமான சித்தரின் மேல் வாடாத மலர்களும் அணையாத விளக்கும் இருக்கிறது என்று ஆச்சர்யப்பட்டு மேற்கொண்டு சித்தரின் தவத்தைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று முடிவு செய்து அந்த சமாதியைச் சீர் செய்து கோயில் எழுப்பி வழிபட்டனர். அதன் பின் அந்தச் சந்நிதியில் வந்து முறையிட்டவர்கள் அனைவருக்கும் வேண்டும் வரம் கிடைத்தது என்கிறார்கள் ஊர்மக்கள். ஜீவசமாதி அடைந்து 190 ஆண்டுகள் ஆனபிறகும் இன்றளவும் நம்பிக்கையுடன் வரும் பக்தர்களின் குறையை தீர்த்து வைக்கிறார் சித்தர்பிரான்.
ராமநாதபுர சீமையின் குறுநில நாடான செம்பிநாட்டின் அரசன் பூவலவத்தேவனுக்கும் - குமராயி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு 5 வயது இருக்கும் போதே இவரது தந்தை இறைவனடி சேர்ந்தார். அரச உரிமை ஆசையால் முத்துவடுகநாதரைக் கொல்ல உறவினர்கள் திட்டமிட்டனர். செல்வத்தை விட மகனின் உயிரைப் பெரிதாக மதித்த தாய் மகனைத் தூக்கிக் கொண்டு இரவோடு இரவாக செம்பி நாட்டை விட்டு வெளியேறினாள். இருவரும் பாலமேடு என்னும் ஊரை அடைந்த போது, அந்த ஊரிலிருந்த செல்வந்தரான ஜெகந்நாதர் என்பவர் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்தார்.

பாம்பு குடைபிடித்த அதிசயம்
சிறுவனான முத்துவடுகநாதர் மாடுகள் மேய்ப்பதில் ஆர்வமாக இருந்தார். ஒரு நாள் மாடு மேய்க்க சென்றிருந்தபோது முத்துவடுகநாதர் உறக்கம் வந்துவிட அங்கேயே படுத்து உறங்கினார். அங்கு வந்த ஊர்மக்கள் கண்ட காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. முத்துவடுகநாதர் உறங்கிக் கொண்டிருக்க, அவர் முகத்தில் வெயில் படாதபடி நாகப்பாம்பு படமெடுத்து அவர் தலைக்கு மேல் நின்று கொண்டிருந்தது. இவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல, ஒரு சித்தபுருஷர் என்பதை உணர்ந்த ஜெகந்நாதர் அவரைத் தன் மகன் போலவே நடத்தினார்.
முத்துவடுகநாதர் சிறுவயது முதலே மிகுந்த ஞானத்துடன் திகழ்ந்தார். வராகி அம்மனின் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார். ஜெகந்நாதருக்கு ஒருமுறை ராஜ பிளவை நோய் ஏற்பட்டது. பல மருத்துவ நிபுணர்களால் குணப்படுத்த முடியாத நோயை சித்தர் வெறும் திருநீறை வைத்து குணப்படுத்தினார்.
பின்னர் முத்துவடுகநாதர் தன் தாயுடன் அழகர் மலைக்கு சென்று பாலைய சுவாமிகளிடம் பல்வேறு உபதேசங்களைப் பெற்றார். பட்டூர் என்னும் ஊரை அடைந்து அங்கு சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியை மேற்கொண்டார். அந்த ஊர் மக்கள் "வாத்தியார் ஐயா" என்று அவரை அழைத்தனர்.
மந்திரக்கட்டை உடைத்து மகிமைபுரிந்த விளையாடல்
பட்டூருக்கு வடகிழக்கில் உள்ள சிங்கம்புணரியில் 'பீதாம்பரர்கள்' என்னும் மந்திரக் கூட்டம் மக்களுக்குப் பெரும் தொல்லை கொடுத்து வந்தனர். முத்துவடுகநாதரின் மகிமையை அறிந்த சிங்கம்புணரி மக்கள் பீதாம்பரர்களிடம் இருந்து தங்களைக் காக்க அவரை அழைத்தனர். அவர்களுக்கு உதவும் நோக்கோடு சித்தர் சிங்கம்புணரி சென்றார்.
சிங்கம்புணரியில் வைகாசித் திருவிழா நடந்து கொண்டிருந்தது. அந்த ஊர்க்கோயிலின் தெய்வத்தை மாந்திரீகர்கள் மந்திரக் கட்டுகளால் கட்டியதை உணர்ந்த சித்தர் அந்த ஊர்க்கோயில் தெய்வத்திடம் சென்று, 'யான் உன்னைக் கூப்பிடுவேன்,ஏன்? என்று பதில் உரைக்க வேண்டும்.இல்லையேல் உதைப்பேன்'என்றார்.
மந்திரக்கட்டுகள் நீங்கும் வண்ணம் அவர் அந்த சிலையை எட்டி உதைக்க சிலை நகர்ந்தது. ஆனால் இதை உணராத ஊர்மக்கள் சிலர் அவரின் மீது கோபம் கொண்டனர். சித்தரை பலமாகத் தாக்கி ஒரு குழிக்குள் தள்ளி மிளகாய்ப்புகையையும், சூரை முற்களையும் போட்டு மூடிவிட்டனர். ஆனால் அனைவருக்கும் நடுக்கத்தைத் தரும் வகையில் சித்தர் பத்திரமாக தன் வீட்டில் அமர்ந்து இருந்தார். அவரின் மகிமையை உணர்ந்த அனைவரும் அவரிடம் மன்னிப்பு வேண்டினர்.

மீண்டும் அவரிடமே பீதாம்பரர்களை விரட்ட வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். கோபம் தணிந்த சித்தர் தன்னுடைய மந்திர சக்தியால் ஒரு துணியைப் பல துண்டுகளாக கிழித்து அவற்றைப் பாம்பாக்கி மந்திரக்கூட்டத்தை ஓட ஓட விரட்டினார். இந்த ஊரிலேயே தங்கியிருந்த சித்தர் செய்த சித்து விளையாட்டுகள் ஏராளம்.
சிங்கம்புணரி மக்கள் 'வாத்தியார் ஐயா' என்றே இன்றளவும் அவரை அன்புடன் அழைக்கிறார்கள். சித்தர் ஜீவசமாதி அடைவதற்கு முன்பு அவர் கூறியபடியே இன்றளவும் அவரை வழிபடும் முறைகள் தொடர்கின்றன. அவரே தேர்வு செய்ததைப் போல் சிவந்திலிங்கப் பண்டாரம் என்பவரின் வம்சாவழியினர் கோயில் பூஜைகளைச் செய்கின்றனர். சித்தர் வாழ்ந்த காலத்தில் அவரைப் பெரிதும் ஆதரித்த வணிகர்கள் கோயிலுக்காகப் பல பணிகளைச் செய்கிறார்கள். வெள்ளிக்கிழமை தோறும் கடைவீதியிலுள்ள வணிகர்கள் அனைவரிடமும் கோயிலுக்கான காணிக்கை பெறப்படுகிறது.
சித்தர் வாழ்ந்த வீடும் சிங்கம்புணரியில் உள்ளது. சித்தரின் வம்சாவழியினர் அவர் செய்த வராகி வழிபாட்டை இன்றளவும் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
சித்தர் முத்துவடுகநாதரின் வம்சாவழியினரான திரு.ராமசுப்பிரமணியம் இது குறித்து கூறுகிறார்,
"நாங்கள் சித்தர் ஐயாவிற்குப் பிறகு காலம் காலமாக இந்த வராகி வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வருகிறோம். எனக்கு முன் என் அப்பா செய்து வந்தார். கிட்டத்தட்ட 61 வருடங்களாக நான் இந்த வழிபாடு செய்து வருகிறேன். ஐயா அவரின் கையால் எழுதிய 300 ஓலைச்சுவடிகள் இன்றும் உள்ளன. அவற்றை வைத்தே இந்த வழிபாடுகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்." என்கிறார்.
சித்தர் வாழ்ந்த வீட்டில் அமைந்திருக்கும் பூஜையறை அவர் வாழ்ந்த காலத்தில் இருந்தது போலவே அப்படியே பராமரிக்கப்பட்டு வருகிறது. அவர் உபயோகித்த பொருள்களான பாதரட்சைகள்,கைத்தடி போன்றவையும் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.
வருடாவருடம் இந்தக் கோயிலில் நடைபெறும் சித்திரா பௌர்ணமி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து சித்தரைக் குளிர்விக்கிறார்கள். ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் சித்தர் ஜீவசமாதி அடைந்த தினத்தில் குருபூஜை விழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த வருடம் 190 ஆவது குருபூஜை விழா நடக்க இருப்பது கூடுதல் சிறப்பாகும். ஆடிப் பெருக்கு தினத்தில் வணிகர்கள் சார்பில் அன்னதானப் பெருவிழா ஒன்றும் இங்கு நடைபெறுகிறது.
சித்தர் முத்துவடுகநாதர் பக்தியுடன் வரும் அனைத்து மக்களின் பிரச்னைகளையும் தீர்த்து வைக்கிறார். குழந்தை வரம் வேண்டுவோர், வியாபாரத்தில் நலிவுற்றோர், மாந்திரீகத்தால் அல்லல் படுவோர் என அனைவருக்கும் சித்தரை வேண்டிக் கொள்ளுதல் நல்ல தீர்வாக அமைகிறது. பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்களைப் பார்க்க நேர்ந்தாலோ, அவற்றை கொன்று விட்டாலோ முட்டையும் பாலும் வாங்கி சித்தருக்கு செலுத்துகிறார்கள். அந்த விஷப்பிராணிகளால் மேலும் இடையூறு நேராமல் சித்தர் காப்பாற்றுவார் என்பது இந்த ஊர் மக்களின் நம்பிக்கையாக உள்ளது. சித்தரின் உருவப்படம் இருக்கும் இடத்தில் விஷப்பிராணிகள் வராது எனவும் கூறுகின்றனர்.
நம் வாழ்வின் அல்லல்கள் அகழ சிங்கம்புணரி சித்தரை வழிபடுவோம்! நலம் பெறுவோம்!
மேலும் படிக்க வாடாத மாலை, அணையாத விளக்கு - அற்புதங்கள் புரிந்த சிங்கம்புணரி முத்துவடுகநாத சுவாமி சித்தர்!