எஸ்.பி.வேலுமணி வீட்டில் 2-வது ரவுண்டு ரெய்டு - முறையான நடவடிக்கையா, அரசியல் பழிவாங்கலா?

0

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் இரண்டாம் முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. ஆகஸ்ட் 10, 2021-ல் 60 இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியிருக்கிறது. காலை 6 மணிக்குத் தொடங்கிய ரெய்டு எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான அ.தி.மு.க நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்கள், ஒப்பந்ததாரர்கள், கல்வி நிறுவன உரிமையாளர்கள் என மாலை 7 மணி வரை நீண்டது. இதையொட்டி பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் எஸ்.பி.வேலுமணி, அவரின் சகோதரர் உள்ளிட்டோர் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

முன்னர் நடந்த ரெய்டைப் போலவே இப்போதும் வேலுமணியின் வீட்டின் முன் கூடிய அ.தி.மு.க தொண்டர்களுக்குக் காலை உணவு, ஸ்நாக்ஸ், குளிர்பானம், மதிய உணவு, டீ போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரெய்டையொட்டி வேலுமணியின் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பண்ணன், தங்கமணி, செங்கோட்டையன், உதயகுமார் ஆகியோர் வந்திருந்ததோடு ரெய்டு முடியும் வரை வேலுமணியுடனேயே இருந்தனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சில, செல்போன், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள், தங்கம், வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை செய்திக் குறிப்பில் கூறியிருக்கிறது.

வேலுமணி ரெய்டு

“என் வீட்டில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை நடத்தி எங்கள் வேலைகளை முடக்க நினைக்கிறார். ஆனால், அது நடக்காது.” என வேலுமணி பேசியிருக்கிறார். வேலுமணி மீதான சோதனையின் பின்னணி என்ன என்ற விசாரணையில் இறங்கினோம்.

அ.தி.மு.க வழக்கறிஞர்கள் பிரிவுப் பிரதிநிதி இன்பதுரையிடம் பேசினோம், “நிச்சயம் இது பழிவாங்கும் நடவடிக்கைதான். ஆறு மாத இடைவெளியில் மற்றொரு சோதனை நடத்த வேண்டிய தேவை என்ன? புதிதாக எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடலாம். புதிதாக ஏதாவது தகவல் உங்களுக்குக் கிடைத்திருக்குமானால் வேலுமணிக்குச் சம்மன் கொடுத்து விசாரணை செய்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு அதிகாரிகளைச் சுவர் ஏறிக் குதிக்க வைத்து சோதனை நடத்தியிருப்பதெல்லாம் உண்மையில் பழிவாங்கு நடவடிக்கையில்லாமல் வேறு எப்படிப் பார்ப்பது. காவல்துறையை வைத்து தி.மு.க அரசு எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கிறார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால் ராஜேந்திர பாலாஜிக்கு பாஸ்போர்ட்டே இல்லை. ஒரே ஒரு முறை வெளிநாடு சென்றிருக்கிறார். அதுவும் அரசு முறைப் பயணம் என்பதால் டிப்ளமஸி பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டது.

வழக்கறிஞர் இன்பதுரை - அதிமுக

ஜெயக்குமார் வழக்கில் நில அபகரிப்பு வழக்கில் 397 என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. இது கொடூரமான ஆயுதம் வைத்துக் கொள்ளை அடித்ததற்குப் பதிவு செய்வது ஆகும். சென்னை உயர் நீதிமன்றம் ஜெயக்குமார் வைத்திருந்த ஆயுதம் என்ன என்று கேட்டபோது அரசுத் தரப்பில் அதற்கான பதிலே இல்லை. இப்படி எல்லா வழக்கையும் வேண்டுமென்றே திட்டமிட்டுப் பதிவு செய்து அ.தி.மு.க தலைவர்களை அசிங்கப்படுத்துகிறது தி.மு.க அரசு." என்றவர்...

“பணம், கிரிப்டோ கரன்ஸி எல்லாம் கைப்பற்றப்பட்டதாக அரசுத்தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையே போலியானது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் செய்துவிட்டதாகத்தான் இவர்கள் வேலுமணி மீது குற்றம்சாட்டிச் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், ஸ்மார்ட் சிட்டி திட்டம் மத்திய அரசின் மேற்பார்வையில் நடப்பது. வேலுமணி அந்தத் திட்டம் தொடர்பாக எதிலும் கையெழுத்துகூட போட்டதில்லை. எனும்போது எதை வைத்து ஊழல் செய்ததாகச் சொல்கிறார்கள் என்பது புரியவில்லை.

பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பார்கள். அப்படித் தெரிந்தோ தெரியாமலோ தமிழக மக்கள் மீது தி.மு.க ஆட்சி வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சி முடியும் வரை தி.மு.க-வின் அரசியல் வெறியாட்டத்தையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. இவை எல்லாவற்றையும் நாங்கள் நீதிமன்றத்தின் துணையோடு எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்.

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி வழக்கில் புகார் அளித்தவர், விஜய நல்லதம்பியிடம்தான் பணம் அளித்தோம் எனச் சொல்லியிருந்தார். எந்த இடத்திலும் ராஜேந்திர பாலாஜியிடம் பணம் கொடுத்தேன் எனச் சொல்லவில்லை. ஆனால், ராஜேந்திர பாலாஜியைச் சிக்க வைப்பதற்காக இரண்டாவது ஒரு புகாரை வாங்கி, அதில் ராஜேந்திர பாலாஜியைச் சேர்த்து, அவரைக் குற்றவாளிபோலத் துரத்தினார்கள். ஆனால், இறுதியில் உச்ச நீதிமன்றத்திடம் குட்டுப்பட்டார்கள். இப்போது வேலுமணி விவகாரத்திலும் அதுதான் நடக்கிறது. இதையும் நாங்கள் நீதிமன்றத்தில் சென்று எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்.” என்றார்.

முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்தது குறித்து தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தியிடம் பேசினோம். “வேலுமணி மீதான சோதனை பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. இது குறித்து வேலுமணி சொன்ன போது, “என்கூட பழகியவர்கள், வாக்கிங் போனவர்கள் எல்லோர் வீட்டிலும் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.” என்றிருக்கிறார். அமைச்சராக இருந்தவர், இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ரகசியக் காப்பு பிரமாணம் எடுத்தவர், பக்கத்து வீட்டுக்காரர்கள், வாக்கிங் வந்தவர்கள் என எவ்விதத் தகுதியும் இல்லாதவர்களிடம் அரசின் ஒப்பந்தங்களைக் கொடுத்து, கமிஷன் வாங்கி பல கோடி ரூபாய் கொள்ளையடித்ததால்தான் அவரோடு தொடர்புடைய அனைவரையும் விசாரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

ராஜீவ் காந்தி திமுக

ஏற்கெனவே செய்த விசாரணையில் பல கோடி ரூபாய் பணம், தங்கம், வெள்ளி பொருள்களின் விவரங்கள் சரிவரக் கிடைக்கப் பெறாததால்தான் தற்போது மீண்டும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அரசின் ஒப்பந்தங்களை விற்பனை செய்து, கமிஷன் வாங்கி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததன் பலனைத்தான் தற்போது அனுபவித்து வருகிறார் என்றுதான் நான் பார்க்கிறேன்.” என்றவர்...

“லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை மற்ற வழக்குகள் மாதிரி கையாள முடியாது. முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துவிட்டுத்தான் சோதனைக்கே செல்ல முடியும். இந்த முதல் தகவல் அறிக்கையில் அவர் சொத்து சேர்த்த விகிதம் மற்றும் சேர்த்த சொத்துகளின் விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அந்தத் தகவல் அறிக்கையை யார் வேண்டுமானால் பார்க்கலாம். அ.தி.மு.க ஆட்சியில் அனைத்து அமைச்சர்களையும் தன் கைக்குள் வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட சமூகத்தின் பிரதிநிதியாகக் காட்டிக்கொண்டு, ஊழல் மனநிலையோடு உலக, ஆசிய நிதிகளை மக்களின் வாழ்வியலுக்குப் பயன்படுத்தாமல் வெற்றுத் திட்டங்கள் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார். அதற்காக மற்ற அமைச்சர்கள் புனிதர்களாக இருந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. அவர்கள் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. நீதிமன்ற உத்தரவு பெற்று அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலுமணி கேரளா வீடு

என் மீது மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் ரெய்டு நடத்துகிறார்கள் என வேலுமணி சொல்வதே தன் கட்சியினரையே காட்டிக்கொடுத்துவிட்டுத் தான் தப்பித்துக்கொள்ள வேலுமணி செய்யும் மலிவான அரசியலாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. வேலுமணி செய்த ஊழலுக்கு இன்னும் அவர் மீதான நடவடிக்கைகள் தொடரும்.” என விமர்சனங்களுக்கு விளக்கமளித்தார்.


மேலும் படிக்க எஸ்.பி.வேலுமணி வீட்டில் 2-வது ரவுண்டு ரெய்டு - முறையான நடவடிக்கையா, அரசியல் பழிவாங்கலா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top