ரஷ்யா - உக்ரைனுக்கு இடையேயான போரை உலகமே உற்று நோக்கிக்கொண்டிருக்க, கடந்த சில தினங்களாக உள்ளூர் பிரியாணி மீது சமூகவலைதளத்தில் போர் தொடுக்கப்பட்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு ட்விட்டரில், `சென்னையில் சந்துக்கு சந்து பிரியாணி கடை போட்டு கல்யாணம் ஆனவர்களை டார்கெட் செய்த பிரியாணி கும்பல், தற்போது இரவு நேரங்களில் பணிபுரியும், கல்யாணம் ஆகாத இளைஞர்களை டார்கெட் செய்ய ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த இரவு நேர பிரியாணி' எனத் தொடங்கி `திருமணத்துக்குப் பிறகு ஒரு செயற்கைக் கருத்தரிப்பு நிலையத்தின் முன் நிற்கும் போதுதான் இந்த அறிவு எட்டிப் பார்க்கும். ஆனால் அப்போது நேரம் மிகவும் கடந்து போயிருக்கும்' என ஒரு நெட்டிசன் போஸ்ட் என்ற பெயரில் பக்கம் பக்கமாக பிரியாணியைத் திட்டி தீர்த்திருந்தார்.

அதற்கும் ஒருபடி மேல் போய், ``பிரியாணியை இந்துக்கள்தான் அதிகம் சாப்பிடுகின்றனர் என்றும் பிரியாணியை விற்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் யாராவது ஒருவர் அந்தச் செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு வருகிறார்களா என்று எப்போதாவது நீங்கள் ஆராய்ந்து பார்த்ததுண்டா?" எனவும் ஆதங்கப்பட்டிருக்கிறார். இந்தப் பதிவு அடுத்தடுத்த நிலைகளுக்குச் சென்று `பிரியாணி சாப்பிட்டால் ஆண்மைக் குறைவு ஏற்படும்' என்பதாக மாறிவிட்டிருக்கிறது.
இந்தப் பதிவை சற்று உற்றுநோக்கினால் ஒரு முரணைக் கண்டறிந்துவிட முடியும், அதற்கு முன்பாக முதலில் பிரியாணி என்பது குறிப்பிட்ட மதத்தினரின் அடையாளம் என்பது போலவும் சமீப காலமாகத்தான் மக்களை டார்கெட் செய்துகொண்டிருக்கிறது என்பதற்கும் பின்னால் இருக்கும் விஷயங்களை ஆராய வேண்டும்.
2,000 ஆண்டுகளுக்கு முன்னரே `ஊன் துவை அடிசில்' என்ற பெயரில் பிரியாணியை சங்ககாலத்திலேயே புலவர்கள் பாடியுள்ளனர். ஊன் என்றால் இறைச்சி, துவை என்பது கலந்த தன்மை, அடிசில் என்பது சமைக்கப்பட்ட உணவு என்று பொருள். `ஊன் துவை அடிசில்' என்றால் இறைச்சி கலந்து சமைக்கப்பட்ட உணவு என்று அர்த்தம். பதித்துப்பற்றில் புலவர் பாணர், `சோறு வேறு என்னா ஊன்துவை அடிசில்ஓடாப் பீடர் உள்வழி இறுத்து' என்று குறிப்பிட்டுள்ளார். போரில் வெற்றி கண்ட பிறகு தன் வீரர்களுக்கு சேரன் செங்குட்டுவன் வழங்கிய `ஊன் துவை அடிசில்' விருந்தில் சோறு வேறாக, இறைச்சி வேறாகப் பிரிக்க முடியாதபடி ஒன்றி இருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதேபோன்று புறநானுற்றுப் பாடலில் எப்போதும் போர்முனையிலேயே இருக்கும் சோழன் நலங்கிள்ளியின் பாசறையில் ஊன் சோறு வழங்குவதால் அந்தப் பாசறையே எப்போதும் ஆரவாரம்மிக்கதாக இருக்கும் என்று கோவூர் கிழார் பாடியுள்ளார். அதே போன்று கபிலரும் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடிய பாட்டிலும் ஊன் துவை கறி சோறு என்று குறிப்பிட்டிருக்கிறார். சங்க இலக்கியங்களில் இப்படியெல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தாலும் பெர்சிய நாட்டுப் போர்வீர்களின் உணவு, பிற்காலத்தில் அந்நாட்டிலுள்ள இஸ்லாமியர்களால் விரும்பிச் சாப்பிடும் உணவாக மாறியது. அங்கிருந்து இந்தியாவுக்குப் பயணித்த முகலாயர்களால் இந்தியாவுக்குள் நுழைந்தது என்று வரலாறு சொல்கிறது.
ஆக, ஊன் துவை அடிசிலோ, பிரியாணியோ எதுவாக இருந்தாலும் அதற்கும் இந்திய துணைக் கண்டத்துக்கும் நீண்ட நெடிய வரலாறு உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி பெயர்பெற்ற பிரியாணி தற்போது இடத்துக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு ஹைதராபாத் பிரியாணி, கேரள பிரியாணி, தம் பிரியாணி, மந்தி பிரியாணி என்று மாற்றம் கண்டுள்ளது. மேலும் கிறிஸ்துமஸ், தீபாவளி, பக்ரீத் என மதப் பண்டிகையாக இருந்தாலும் பிரியாணிக்கென்று தனியிடமும் ஒதுக்கப்படுகிறது.

மறுபடியும் அந்தப் பதிவில் சொல்லப்பட்டிருக்கும் முக்கியமான(?) விஷயத்துக்கு வருவோம். பிரியாணியை சாப்பிட்டால் செயற்கைக் கருத்தரிப்பு மையங்களில் கொண்டு நிறுத்திவிடும் என்று சொல்லப்பட்டிருக்கும் பதிவின் அடுத்த வரியில் பிரியாணியை விற்பவர்கள் யாரும் செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்குச் வருகிறார்களா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த இரண்டு வரிகளும் ஒன்றுக்கொன்று முரணானவை. பிரியாணி விற்பனை செய்பவர்கள் செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்குச் செல்வதில்லை என்றால் பிரியாணியை சாப்பிடும், விற்பனை செய்பவர்களுக்கு குழந்தையின்மை பிரச்னை ஏற்படவில்லை என்றுதானே அர்த்தம். அப்படியென்றால் இப்போது வரிசையில் நின்று பிரியாணி வாங்கிச் சாப்பிடுபவர்கள் ஏன் செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்குச் செல்லப் போகிறார்கள்?
இவ்வளவெல்லாம் ஆராய வேண்டாம். நமக்குத் தெரிந்த இஸ்லாமியக் குடும்பத்தை எடுத்துக்கொள்வோம். அவர்கள் வீட்டில் எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்தினாலே விடை கிடைத்துவிடும். உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்களைக் குறி வைப்பதற்காக இரு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசின் சலுகைகள் ரத்து செய்யப்படும் என்று சட்ட வரைவு இயற்றப்பட்டது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். ஒருபுறம் பிரியாணியை உணவாகச் சாப்பிடுகிறவர்களால் மக்கள்தொகை அதிகரிக்கிறது என்கிறார்கள், மற்றொரு புறம் பிரியாணி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்காது என்று சொல்லப்படுகிறது. இரண்டில் ஏதாவது ஒன்றுதானே உண்மையாக இருக்க முடியும்.

இறுதியாக, மருத்துவ ரீதியாக இந்தப் பிரச்னையை ஆராயலாம். பிரியாணியைப்பற்றி நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி சுலைமான் வெளியிட்ட பதிவு இது.
``பீஃப் /சிக்கன் /மட்டன்/ முட்டை/ நெய் சேர்த்துக் கிடைக்கும் விலை குறைவான புரதச்சத்து மிக்க உணவு. அதில் சேர்க்கப்படும் இஞ்சி, பூண்டு, லவங்கம், பட்டை என அனைத்தும் தடுப்பு மருத்துவம் மற்றும் ஜீரண மண்டலத்துக்கு உகந்த உணவு. பாசுமதி மற்றும் சீரக சம்பா அரிசியால் செய்யும் உணவு சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பாதுகாக்கும். கறி, முட்டை, மீன், இறால் ஆகியவை நல்ல கொலஸ்ட்ரால் ஆகும். அந்த கொழுப்புச்சத்து நம் உடலில் டெஸ்டோஸ்டீரான் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பை சமநிலைப்படுத்தும்."
அனைத்திலும் முக்கியமாக இது ஆகச்சிறந்த `மனநல மருந்து' என்கிறார். பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஹார்மோன்கள்தான் ஆண், பெண்களுக்கு குழந்தைப் பிறப்பு, தாம்பத்தியம் ஆகியவற்றுக்கு வலு சேர்க்கும் முக்கிய ஹார்மோன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போ, பிரியாணி சாப்பிட்டால் கெடுதலே கிடையாதா என்றால் `அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்ற பழமொழிதான் இதற்குப் பதில். எந்த உணவையும் அடிக்கடியோ அளவுக்கு மீறியோ எடுக்கும்போது அது உடல்நலத்தை தொந்தரவு செய்யவே செய்யும். அது பிரியாணியானாலும் சரி, தயிர் சாதமாக இருந்தாலும் சரி.
``ராத்திரி 8 மணிக்கு ஷிஃப்ட் தொடங்கி 4 மணிக்கு முடியும். ராத்திரி முழுக்க இயற்கையை மீறி தூங்காம வேலை செய்வோம். விடியக்காலை நாலு மணிக்கு வேலை முடிஞ்சு வெளில வரும்போது கொலப்பசியா இருக்கும். ஆஃபிஸ் கேன்டீன்லயும் சரி, வீட்லயும் சரி அந்த நேரத்துக்கு சாப்பாடு கிடைக்காது. அந்த நேரத்துல எங்க ஆபீஸ் பக்கத்துல கையேந்தி பவன்ல ஒரு பிரியாணி கிடைக்கும். இருக்குற பசியில சுடச்சுட அதை எடுத்து வாயில போட்டா கிடைக்கும் பாருங்க ஒரு ஆத்ம திருப்தி..." சிலாகித்துச் சொன்னார் சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் இரவுப் பணியில் இருக்கும் ஊழியர்.

இந்த வார்த்தைகளில் அந்த ஊழியர் கடத்தும் பசியுணர்வை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் அந்நேரத்தில் கிடைக்கும் பிரியாணியின் அருமையும் புரியும். ஒட்டுமொத்தத்தில் உணவு என்பது தனிநபர் சார்ந்த உரிமை. அதுபற்றி பேசுபவர்கள் குறைந்தபட்ச தெளிவுடன் பேசுவது நல்லது. ஒரு பிளேட் பிரியாணிக்கு போய் குழந்தை பாக்கியம்... செயற்கைக் கருத்தரிப்பு மையம்...என புதுப்புது உருட்டுகளை உருட்ட வேண்டாமே... ப்ளீஸ்!
மேலும் படிக்க பிரியாணி, ஆண்மைக்குறைவு, IVF; இது என்னய்யா புது உருட்டா இருக்கு?!