13வது பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழாவில் மூன்றாம் நாள் திரையிடலில் முத்தாக அமைந்த சத்தான திரைப்படம் ‘பாதர்’. இயக்குநர் சர்டான் கொலுபொவிச் ‘பாதர்’ திரைப்படத்தின் மூலம் ‘பெர்லின் திரைப்பட விழா’ உட்பட 15க்கும் மேற்பட்ட விருதுகளை அள்ளியிருக்கிறார்.பாதர் திரைப்படம் செர்பிய நாட்டின் அரசியல்,சமூக அவலங்களை படத்தின் அனைத்து சட்டகங்களிலும் நிரப்பி இருக்கிறது.
படத்தின் தொடக்க காட்சியே அதிர வைக்கிறது. ஒரு தொழிற்சாலையில் ஒரு பெண் தன் இரு குழந்தைகளுடன் வந்து நீதி கேட்கிறாள். ‘தன் கணவன் நிக்கலோவ் என்பவரை வேலையிலிருந்து நீக்கி ஒரு வருடம் கழிந்தும் சம்பளப்பாக்கியை தரவில்லை. அனைவரும் பட்டினி கிடக்கிறோம்.இனி பொறுக்க இயலாது’ என தன் மீது கொண்டு வந்த பெட் ரோலை ஊற்றி பற்ற வைத்துக்கொள்கிறாள்.
உடனடியாக ஊழியர்கள் ஓடி வந்து காப்பாற்றி விடுகிறார்கள். அந்தப்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து குணப்படுத்தி மனநல சிகிச்சை வழங்குகிறார்கள். குழந்தைகளை சமூக நலத்துறை தங்களது பொறுப்பில் பாதுகாக்கிறார்கள்.
செய்தியறிந்து ஓடி வந்த நிக்கலோவ் குழந்தைகளை ஒப்படைக்குமாறு சமூகநலத்துறை அதிகாரிகளிடம் மன்றாடுகிறான்.
‘நிரந்தர வேலையில்லை;வீட்டில் தண்ணீர்,மின்சாரம் அனைத்தும் துண்டிக்கப்படுள்ளது;குழந்தைகளை வளர்க்க உனக்கு தகுதி இல்லை’ என சமூகநலத்துறை உயர் அதிகாரி மறுத்து விடுகிறார
நீதி கேட்டு நெடும் பயணம் மேற்கொள்கிறான் நிக்கலோவ். 300 கிலோமீட்டர் கடந்து தலைநகரை அடைந்து சமூகநலத்துறை அமைச்சரை கண்டு முறையிட நடந்து செல்கிறான். காரணம் கையில் பணம் இல்லை. ஆனால், துணிச்சலும் தன்னம்பிகையும் நிறைந்து இருக்கிறது.
கார்கள் பறக்கும் விரைவு வழிச்சாலைகளில் மனிதன் நடக்க அனுமதி இல்லை. எனவே, காடு,மலை,கிராமம் என பயணிக்கிறான் நிக்கலோவ். போகிற வழியெல்லாம் மனிதர்களும்,விலங்குகளும் மனிதநேயத்துடன் நடந்து கொள்கிறார்கள். கும்பலாக நிற்கும் ஓநாய்கள் கூட நிக்கலோவை தாக்கவில்லை.
ஐந்து நாட்கள் நடந்து சமூக நலத்துறை அமைச்சகத்தை அடைந்தும் அமைச்சரை காண இயலவில்லை.
அதிகாரவர்க்கம் சாக்கு போக்கு சொல்லி அலைக்கழிக்கிறது. ஒற்றை மனிதனாக தர்ணா போராட்டத்தை மேற்கொள்கிறான்.
ஊடகங்கள் நிக்கலோவ் நிலையைச்சொல்லி நாடே நடுங்கிய பிறகு அமைச்சரின் உதவியாளர் ஓடி வந்து சந்திக்கிறார். ஆவன செய்கிறேன்’ என வாக்குறுதி அளித்து அவனுடன் செல்பி எடுத்து டிவிட்டர் பக்கத்தில் பகிரந்து கொள்கிறார். சமூக நலத்துறை அமைச்சகம் பரிந்துரைத்தாலும் அந்தப்பகுதியைச்சார்ந்த சமூகநலத்துறை அதிகாரி குழந்தைகளை ஒப்படைக்க மறுக்கிறார்.
காரணம் ‘சிஸ்டம்’. சட்டத்தை காரணம் காட்டி நிக்கலோவை கட்டம் கட்டுகிறார்.
அது கூட அதிர்ச்சியில்லை. நிக்கலோவ் வீட்டில் உள்ள அனைத்துப்பொருட்களையும் எடுத்துச்சென்று விட்டார்கள் அக்கம்பக்கத்தார். இக்காட்சிதான் செர்பிய சமூகத்தின் அவலநிலையை அறைந்து சொல்கிறது.






பராசக்தி படத்தில் தனது வசனங்கள் மூலம் சமூக அவலத்தை படம் பிடித்துக்காட்டினார் கலைஞர். பாதர் படத்தில் காட்சி வடிவத்தில் காட்டுகிறார் இயக்குநர் சர்டான் கொலுபொவிச்.
தமிழ்நாட்டில் பராசக்தி மாற்றங்களை நிகழ்த்தியது. செர்பியாவில் பாதர் நிகழ்த்துமா?
காத்திருப்போம் ‘நிக்கலோவ்’ போல!.
‘Father’ Running time: 119 MIN. (Original title: "Otac”) Crew: Director: Srdan Golubović. Screenplay: Golubović, Ognjen Sviličić. Camera: Aleksandar Ilić. Editor: Petar Marković. With: Goran Bogdan, Boris Isaković, Nada Šargin, Milica Janevski.
மேலும் படிக்க செர்பியாவில் ஒரு பராசக்தி | உலக சினிமா #MyVikatan