சென்னையில் தனியார் நிறுவனத்திடம் போலி வருமான வரித்துறை அதிகாரியை வைத்து ஜி.எஸ்.டி என்ற பெயரில் ரூபாய் ஒரு கோடி மோசடி செய்த விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சந்தோஷ் நகரைச் சேர்ந்த ரம்யா அவுட் சோர்சிங் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெங்கடேசன். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அதில், "காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரம்யா அவுட்சோர்சிங் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் என்ற ஜி.எஸ்.டி பதிவு செய்யப்பட்ட நிறுவனம் நடத்தி வருகிறேன். இந்த நிறுவனத்துக்கு ஜி.எஸ்.டி சம்பந்தமான சோதனைக்காக உயர் அதிகாரிகள் வந்தனர். 2017-18 மற்றும் 2019-20 ஆகிய ஆண்டில் ரூ 4.25 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகக் கூறப்பட்டது. அந்த தொகையை உடனே செலுத்த நோட்டீஸ் கொடுத்துச் சென்றனர்.

இதையடுத்து எனது நிறுவனத்தின் ஆடிட்டர் மோகன்பாபுவை இது சம்பந்தமாக அணுகும் போது தானாக முன்வந்து தணிகைவேல் என்பவர் தனக்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் உயர் அலுவலர்களைத் தெரியும். நிறுவனத்திற்குக் கொடுத்த நோட்டீஸை ரத்து செய்ய வைப்பதாகக் கூறி நம்பவைத்தார்.
மேலும், இது தொடர்பாகச் சென்னையில் உள்ள வருமான வரித்துறை கமிஷனர் தீபக் கோத்தாரி என்பவரைச் சந்திக்க கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்வதாகவும், அப்போது ஒரு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் நோட்டீஸ் ரத்து செய்வதாகவும் கூறினார்.
இதனை நம்பி தணிகைவேல் தீபக் கோத்தாரி மற்றும் அவரின் மகன் பிரசாத் கோத்தாரி ஆகியோரிடம் பல்வேறு தேதிகளில் ஒரு கோடி ரூபாய் வரை பணம் கொடுத்தேன். ஆனாலும், புலனாய்வு பிரிவு அலுவலகத்திலிருந்து தொடர்ச்சியாக நோட்டீஸ் வந்தது. இதனால் சந்தேகமடைந்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விசாரிக்க முயன்றேன். ஆனால் தீபக் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். எனவே நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புகார் கொடுத்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தைப் பெற்றுத் தர வேண்டும்" என்று அதில் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 406 நம்பிக்கை மோசடி, 420 பண மோசடி உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து தீபக் மற்றும் தணிகைவேல் ஆகிய இரண்டுபேரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தீபக் கோத்தாரி தான் வருமான வரித்துறை கமிஷனர் எனக் கூறி ஏமாற்றியதை காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டார்.
மேலும் கைதான தணிகைவேல் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தென்சென்னை மாவட்ட இணைச் செயலாளராக இருந்து வருவது தெரியவந்தது. இதையடுத்து கைதான இரண்டு பேரும் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் படிக்க போலி அதிகாரி நாடகம்; ஜி.எஸ்.டி பெயரில் ரூ.1 கோடி மோசடி! - வி.ஹெச்.பி நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது