``அரசாங்கத்த நம்பித்தான் எங்க நிலத்தை எல்லாம் தூக்கிக் கொடுத்தோம். ஆனா, இன்னைக்கு வேலை இல்லாம நடுத்துதெருவுல நிற்கிறோம். வேலை கேட்டு இரண்டு வருசமா போராடிகிட்டு இருக்கோம். எம்.எல்.ஏ-வுல ஆரம்பிச்சு அமைச்சர் வரைக்கும் எல்லோர்கிட்டயும் கோரிக்கை வச்சுட்டோம். ஆனா, எங்களை யாரும் கண்டுக்கல. இதே நிலைமையில போனா எங்க எதிர்காலம் மட்டுமில்லாம எங்க பிள்ளைகளோடு எதிர்காலமும் பாழாகிடுமோன்னு பயமா இருக்கு'' என கண்ணீர்க் குரலில் தங்களது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கிறார்கள் அதிகத்தூர் கிராம மக்கள்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்தில் இருக்கிறது அதிகத்தூர் கிராமம். அங்கு 1968-ல், தொழில்துறை வளர்ச்சிக்காக 164 குடும்பங்களுக்குச் சொந்தமான 358 ஏக்கர் நிலத்தை ஒரு தனியார் நிறுவனத்துக்கு விவசாயிகளிடம் இருந்து அரசாங்கம் பெற்றுக்கொடுத்தது. அதற்கு மாற்றாக ஒரு குடும்பத்துக்கு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசாங்கம் முடிவுசெய்தது. ஆனால், விவசாயிகளோ, குடும்பத்தில் ஒருவருக்கு அந்த நிறுவனத்தில் வேலை வழங்கவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தனர். அதை ஏற்றுக்கொண்டு 1987-ல் கலெக்டர் முன்னிலையில் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி, 82 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு முதற்கட்டமாக வேலை வழங்கப்பட்டது. அதற்கடுத்ததாக, 1997-ல் மீதமுள்ள 82 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக வேலை வழங்கப்பட்ட 82 பேரில் கடைசியாக 22 பேர் வேலை பார்த்து வந்தனர். அவர்களோடு அந்த கிராமத்தைச் சேர்ந்த 158 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக (Temporary) வேலை பார்த்து வந்தனர். இவர்களின் வாழ்க்கைதான் இப்போது கேள்விக்குறி ஆகியிருப்பதாகப் புலம்புகிறார்கள் கிராம மக்கள்.
வேலையிழந்து தவிப்பவர்களில் ஒருவரான இஸ்மாயில் இதுகுறித்துப் பேசும்போது,``1997 முதல் செயல்பட்ட வந்த இந்துஸ்தான மோட்டார்ஸ் நிறுவனத்தின் `சென்னை வாகனம் பிளாண்ட்' பிரான்ஸ் நாட்டின் PSA குழுமத்தால் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கையகப்படுத்தப்பட்டு 'PCA தானி அலைபேசி இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. PSA குரூப் கையகப்படுத்தத் தொடங்கியதுமே நிலம் கொடுத்த விவசாயிகளின் வாரிசுத் தொழிலாளர்கள் 22 பேருக்கும், விவசாயத் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த 158 ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வேலை மறுக்கப்பட்டது. இந்துஸ்தான மோட்டார் பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து PCA நிறுவனம் கைமாற்றிட நடவடிக்கைகள் மேற்கொண்ட போது, 'Employee Transfer Agreement' பேரில் கையெழுத்திட்டு அப்போது பணியில் இருக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து பணி வழங்கிட ஒப்புக் கொண்டது. தமிழக அரசு அதனடிப்படையில் தான் Asset Transfer-க்கு அரசாணையை வெளியிட்டது. ஆனால், ஒப்புக்கொண்டபடி PCA நிறுவனம் எங்களுக்கு வேலை தர மறுத்துவிட்டது'' என்றார்.
மேலும், ``பரம்பரையாய் விவசாயம் செய்து வந்த நிலத்தையும் கம்பெனியில் செய்து வந்த வேலையையும் இழந்து தெருவில் நிற்கிறோம். மாவட்ட நிர்வாகம் பலமுறை வலியுறுத்தியும் கம்பெனி கண்டுகொள்ளவே இல்லை. பால்வளத்துறை அமைச்சர் நாசர், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் V.G. இராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தலையிட்டும் நிர்வாகம் வேலை தர மறுக்கிறது. முதல்வருக்கும் கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை" என்கிறார் ஆதங்கமாக.
வேலை பறிபோன ஊழியர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும், தொழிற்சாலையை முற்றுகையிட்டும் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை ஆட்சியரின் கவனத்தை எட்டும் சில காலத்தில் ஆட்சியர் மாறிவிடுவது வழக்கமாகிவிட்டது.
இத்தனை பெரிய நிறுவனம், இவர்களை மட்டும் நிராகரிப்பது ஏன் என்பது குறித்து தொழிற்சங்கத் தலைவர் கே.இரவி பேசும்போது "இந்த தொழிற்சாலை இந்த இடத்தில் நிறுவப்பட்டதற்கு முக்கியக் காரணம் இந்த கிராமமும் மக்களும் மேம்படவேண்டும் என்பதற்காகத்தான் . ஆனால், ஊர் மக்களையும், விவசாய வாரிசுகளையும் வேலையில் நியமிக்கக்கூடாது என்று உறுதியாக இருக்கிறது PSA நிறுவனம்.
விளக்கம் கேட்டால், எங்களுக்கு உயர்கல்வி பெற்ற தொழில்துறையில் திறமைமிக்க இளைஞர்கள்தான் தேவை என்று பதில் கூறுகிறது. இதைக் கூறி வெளியூரிலிருந்து பலரை வேலைக்கு நியமித்துள்ளனர். இந்த 22 பேர் உள்ளடக்கிய தொழிலாளர் சங்கத்துக்கு இழப்பீடு வழங்குவதாக PSA நிறுவனம் அறிவித்து, இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தததாகக் கூறுகிறது. ஆனால் இந்த இழப்பீட்டுக்கு யாரும் ஒப்புதல் தரவில்லை. மொத்தத்தில் இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர அரசு தலையிட வேண்டும். இது வெறும் நிலப் பிரச்னை அல்ல மொத்த கிராமத்தின் வாழ்வாதாரப் பிரச்சனை" என்றார்.

இது குறித்து PSA நிறுவனத் தரப்பை விசாரிக்க, தொழிற்சாலை மேலாளர் ராஜ் கல்யாண், எச்.ஆர் அகஸ்டின் ஜஸ்டின் மற்றும் தீபக் ஆகியோரைத் தொடர்பு கொண்டோம். இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் அவர்கள் இதுகுறித்து பேசவோ, விளக்கம் அளிக்கவோ மறுத்துவிட்டனர்.
அரசின் நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்ள தி.மு.க தகவல் தொடர்புச் செயலாளர் ரவீந்திரனிடம் பேசினோம். "கண்டிப்பாக அந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை விசாரித்து அவர்களுக்கு தேவையானதைச் செய்து தர இந்த ஆளும் அரசு பூரண முயற்சி மேற்கொள்ளும். விரைவாக இதை அமைச்சர் கவனத்துக்குக் கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுப்போம்" என்று கூறினார்.
மூன்று வருடங்களாக இழுத்தடிக்கப்படும் இந்தப் பிரச்னையில், அரசு தலையிட்டு இவர்களின் இன்னல்களுக்குத் தீர்வு காணுமா?
மேலும் படிக்க `நிலமும் போச்சு; வேலையும் போச்சு' - தவிக்கும் அதிகத்தூர் கிராம மக்கள்... கண்டுகொள்ளுமா அரசு?