நாட்டில் உள்ள அரசு பொதுவுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளின் பணியிடங்களை வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) என்ற அமைப்பு தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது. அதன்படி, மாநிலங்களில் உள்ள வங்கிகளில் பணியாற்றும் கிளார்க்-கள் மக்களுடன் நேரடி தொடர்பு உள்ளதால், அப்பணியிடங்களுக்கு அம்மாநிலத்தவர்களே பணி அமர்த்தப்படவேண்டும் என்ற விதிமுறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் உள்ள அரசு வங்கிகளில் 2021-2022-ம் ஆண்டுக்கான கிளார்க் பணியிடங்களுக்கு அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது.

அதன்படி, பாங்க் ஆப் இந்தியா (21), கனரா வங்கி (90), இந்தியன் வங்கி (555), யூனியன் பாங்க் ஆப் இந்தியா (147), பஞ்சாப் & சிந்த் வங்கி (5), யூகோ வங்கி (5) ஆகிய அரசு வங்கிகளில் மொத்தம் 843 கிளார்க்குகள் பணியிடங்களுக்கான தேர்வு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் 400-க்கும் மேற்பட்ட தமிழ் தெரியாத நபர்கள் பணிக்குச் சேர்ந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீப காலமாகத் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிகளும், தமிழக அரசின் பணியிடங்களிலும் வெளி மாநிலத்தவர்கள் அதிகமாகச் சேர்ந்து வருவதாகத் தகவல் வெளியாகி வருகிறது.
இந்தியன் ஆயில், சி.ஆர்.பி.எப்., அஞ்சல் துறை உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களில் பணிக்குச் சேர்ந்துள்ள 200-க்கும் அதிகமான வடமாநிலத்தவர்கள், தமிழக தேர்வுத் துறையில் வழங்கியது போலப் போலியான மதிப்பெண் சான்றிதழை வழங்கி பணியில் சேர்ந்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல, தமிழக மின்சாரத்துறை உள்பட பல்வேறு அரசுப் பணிகளில் வெளிமாநிலத்தவர்கள் சேர்ந்துள்ளதாகச் சர்ச்சையானது. இந்நிலையில், தமிழ் தெரியாத 400-க்கும் மேற்பட்ட வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் கிளார்க் பணியிடங்களில் சேர்ந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு மாதம் ரூ.35 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கிறது. மாநில மொழிகள் தெரிந்து இருப்பது அவசியம் இல்லை ஐபிபிஎஸ் புதிதாக அறிவித்துள்ளதே இதற்கு காரணமாகும். இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் நல சங்கத்தின் செயலாளர் கோ.கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து கோ.கருணாநிதியிடம் கேட்டபோது, ``அரசு வங்கிகளில் தமிழர்களின் உரிமை பறிபோவது இது முதல்முறையில்லை" என்று தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர்,``2018-ம் ஆண்டு முதல் வங்கிகள் பணியிட நிரப்புதல் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். கடந்த 2018-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசு வங்கிகளில் 1,277 கிளார்க் பணியிடங்கள் நிரப்பபட்டது. அதில் 20 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் வெளிமாநிலத்தவர்கள்தான். இது எப்படி சாத்தியமாயிற்று என்று ஆய்வு செய்தபோது, தமிழகத்தில் உள்ள அரசு வங்கிகளில் கிளார்க் பணியிடங்களுக்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் மாற்றம் குறித்து அமைச்சக தரப்பிலும் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இந்த விவகாரம் குறித்து அப்போதைய தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியும் எந்த பயனுமில்லை. அப்போது பணியில் சேர்ந்த பலரும் 2 ஆண்டுகள் நிறைவு செய்து, தங்கள் சொந்த ஊருக்கு மாற்றம் ஆகிவிட்டனர். இந்த விவகாரத்தை நாம் கண்டுகொள்ளாததால், தற்போது தமிழக வங்கிகளில் 50 சதவீகிதத்துக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இதுகுறித்து முதல்வருக்குத் தெரியப்படுத்தியுள்ளோம்" என்றார்.
மாநில மொழி அவசியமில்லை என்று கூறினால், தமிழக இளைஞர்களுக்கும் பிற மாநிலங்களில் கூடுதல் வாய்ப்பு கிடைக்கும்தானே?. என்று கேட்டபோது, "தமிழக இளைஞர்கள் டி.என்.பி.எஸ்.சி-க்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை ரயில்வே,வங்கி உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்குக் கொடுப்பதில்லை. இதனை பயன்படுத்தி ஒருவரின் பின் ஒருவராக வெளிமாநிலத்தவர்கள் தமிழகத்தை ஆக்கிரமித்து வருகின்றனர். இது தமிழகத்துக்கு மட்டும் பாதிப்பில்லை. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பிராந்திய மொழி பேசும் அனைவருக்கும்தான்.

தாய்மொழியில் இல்லாமல் வேறு மொழியில் தேர்வு எழுதுவது கூடுதல் வாய்ப்பாகக் கருதமுடியாது. வட மாநிலத்தவர்கள் எங்கு வேண்டுமென்றாலும் இந்தியில் தேர்வு எழுதலாம். அப்படியென்றால் அவர்களுக்கு மட்டும்தான் கூடுதல் வாய்ப்பு. பிராந்திய மொழி பேசும் நம்மை போன்றவர்களுக்கு இல்லை.
தமிழ் தெரியாமல் பணியில் சேரும் வெளிமாநிலத்தவர்களுக்கு மாநில மொழியைக் கற்றுக்கொள்ள 3 மாத அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் கற்றுக்கொள்ளவில்லை என்றால், கூடுதல் 3 மாதம் என நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மொழி தெரியவில்லை என்பதற்காக அவர்கள் நீக்கப்படுவதில்லை. மொழி தெரியாத வங்கி ஊழியர்களிடம் பேசுவதற்காகவே அவர்கள் மொழியை நாம் பேசவேண்டுமா?. இதுவும் மறைமுக இந்தி திணிப்புதான். இனி மொழி தெரியாமல் நமது கிராமப்புற மக்கள் திண்டாடப் போகிறார்கள். எனவே இந்த விவகாரத்தில் அரசு கொள்கை முடிவு எடுத்தால் மட்டுமே பிரச்னை தீரும்" என்றார் விரிவாக..
தமிழக அரசுத் துறைகள், மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் 100 சதவீதம் தமிழக இளைஞர்களை நியமனம் செய்ய ஏதுவாக, ஆணையிடப்பட்டுள்ளதைப்போல, தமிழகத்தில் உள்ள வங்கி பணிகள் தமிழர்களுக்கு வழங்க அரசு ஆவன செய்யவேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.
மேலும் படிக்க தமிழ் தெரியாத 50% பேருக்குத் தமிழ்நாட்டில் வேலை... பொதுத்துறை வங்கிகளில் என்ன நடக்கிறது?