மும்பையில் பாந்த்ரா - ஒர்லி இடையே கட்டப்பட்டுள்ள கடல் பாலம் சுற்றுலா தலம் போன்று பயணிப்பவர்களை கவரும் தன்மை கொண்டது. இப்பாலத்தில் காரில் சென்ற சிலர் காரை பாலத்தில் நிறுத்திவிட்டு கடலில் குதித்து தற்கொலை செய்த சம்பவங்கள் நடந்திருக்கிறது. இதனால் பாலத்தில் செல்லும் போது காரை நிறுத்தக்கூடாது என்று வாகன ஓட்டிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தென்மும்பையை சேர்ந்த அமர் மனீஷ் என்ற தொழிலதிபர் தனது காரில் மலாடு நோக்கி சென்று கொண்டிருந்தார். கார் மும்பை கடல் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது ஒரு பறவை காரில் அடிபட்டுவிட்டது. உடனே காரை நிறுத்திய அமர், அவரின் கார் டிரைவர் சியாம் சுந்தர் காமத் ஆகியோர் காரில் இருந்து இறங்கி பறவைக்கு உதவ முயன்றனர்.

அந்நேரம் பாலத்தில் கார்கள் அனைத்தும் வேகவேகமாக சென்று கொண்டிருந்தது. அமரும், காமத்தும் காரிலிருந்து இறங்கி பறவைக்கு உதவ முயன்றபோது வேகமாக வந்த டாக்சி ஒன்று இருவர் மீதும் மோதியது. இதில் இருவரும் பாலத்தில் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் இருவரும் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் சோதித்து பார்த்தபோது அமர் ஏற்கனவே இறந்திருந்தார். காமத்திற்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கண்மூடித்தனமாக கார் ஓட்டியதாக டாக்சி டிரைவர் ரவீந்திர குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து அமர் தந்தை மனீஷ் கூறுகையில், ``எனது மகன் பறவைகள் மற்றும் விலங்குகளுக்காக எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறான். அவன் மீது மோதிய டாக்சி டிரைவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார். அமர் மீது டாக்சி மோதிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க மும்பை கடல் பாலம்: காயமடைந்த பறவையை காப்பாற்ற சென்ற தொழிலதிபர்... கார் மோதி உயிரிழந்த சோகம்