பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக மகாராஷ்டிா மாநிலத்துக்கு நேற்று வந்திருந்தார். முதலில் புனேயில் கோயில் திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு, பின்னர் மும்பை வந்தார். மும்பை ராஜ்பவன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு பாந்த்ரா - குர்லா காம்ப்ளக்ஸில் நடந்த பத்திரிகை ஒன்றின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். முன்னதாக இவ்விழாவிற்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்க விஐபி-க்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்யதாக்கரேயுடன் பிரதமர் மோடியை வரவேற்க தனது காரில் வந்தார். காரை சோதித்த பிரதமரின் பாதுகாப்பு படையினர் உள்ளே இருந்தவர்களை சோதனை செய்தனர். பிரதமர் மோடியை வரவேற்க அனுமதிக்கப்பட்டுள்ள விஐபிக்கள் பட்டியலில் ஆதித்ய தாக்கரே பெயர் இல்லை என்று கூறி அவரை உத்தவ் தாக்கரே காரில் இருந்து கீழே இறங்கும்படி கேட்டுக்கொண்டனர். இதனால் அதிருப்தியடைந்த உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே தனது மகன் மட்டுமல்லாது மகாராஷ்டிரா அமைச்சராகவும் இருப்பதை சுட்டிக்காட்டினார்.. பாதுகாப்பு படையினருடன் வாக்குவாதமும் செய்தார். இதையனை தொடர்ந்து ஆதித்ய தாக்கரேயும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க அனுமதிக்கப்பட்டார்.

எனினும் பிரதமர் மோடி ஆதித்ய தாக்கரேயின் தலையை வருடி நலம் விசாரித்தார். சிவசேனா, பாஜக இடையே தற்போது கடுமையான கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. கூட்டணி மீண்டும் ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லாத அளவுக்கு மோதல் இருக்கிறது. ஆனால் மோடியும் உத்தவ் தாக்கரேயும் தனிப்பட்ட முறையில் நல்ல உறவில் இருக்கின்றனர். ராஜ்ய சபை தேர்தலில் சிவசேனா வேட்பாளரை எதிர்த்து பாஜக கூடுதலாக ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறச்செய்தது. அடுத்த சட்டமேலவை தேர்தலிலும் பாஜக கூடுதலாக ஒரு வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க ``பிரதமரை வரவேற்போர் பட்டியலில் பெயர் இல்லை” - ஆதித்ய தாக்கரேவை இறங்க சொன்னதால் பரபரப்பு