மகாராஷ்டிராவில் தற்போது இருக்கும் சிவசேனா கூட்டணி ஆட்சியை அகற்ற `ஆபரேசன் தாமரை’ என்ற பெயரில் பாஜக ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது என்கிறார்கள். திங்கள் கிழமை சட்டமேலவைத் தேர்தல் நடந்து முடிந்தவுடன் சிவசேனா மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் இரவோடு இரவாக குஜராத் மாநிலம் சூரத்துக்குஇ கொண்டு செல்லப்பட்டு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக குஜராத் பாஜக தலைவர் சி.ஆர் பாட்டீல் குஜராத்தில் இருந்து மும்பை வந்திருந்தார். ஏக்நாத் ஷிண்டேயின் இந்த திடீர் நடவடிக்கையால் சிவசேனா என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறது. உத்தவ் தாக்கரே நேற்று பாக்கி இருக்கும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் 18 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது தகவல். பின்னர் அவர்கள் அனைவரையும் ஓட்டல் ஒன்றில் தங்கி இருக்கும்படி கூறி அனுப்பி வைத்தார்.

மகா விகாஷ் அகாடி தலைவர்களும் உத்தவ் தாக்கரேயை சந்தித்து இப்பிரச்னை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். இச்சந்திப்பின் போது இன்று பிற்பகல் ஒரு மணிக்கு அமைச்சரவை கூட்டத்தை கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. சூரத்தில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் ஏக்நாத் ஷிண்டேயை சந்தித்து பேசுவதற்காக சிவசேனாவின் மிலிந்த் நர்வேகர், ரவீந்திர பதக் ஆகியோர் சூரத் புறப்பட்டு சென்றார்.

சூரத் ஓட்டலில் ஏக்நாத் ஷிண்டேயை மிலிந்த் நர்வேகர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இரண்டு மணி நேரம் நடந்தது. இந்த சந்திப்பின் போது ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேயுடன் போனில் பேச வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இரண்டு பேரும் 10 நிமிடம் போனில் பேசினர். இதில் ஏக்நாத் ஷிண்டே தனக்கு 35 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக இருந்தால் சிவசேனா உடைவதை தவிர்க்க முடியும் என்று உத்தவ் தாக்கரேயிடம் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தாராம். மேலும் தனக்கு முதல்வர் பதவி தேவையில்லை என்றும் ஷிண்டே உத்தவ் தாக்கரேயிடம் தெரிவித்ததாக தகவல். தான் இந்துத்துவா கொள்கையில் உறுதியோடு இருப்பதாகவும், சிவசேனா இந்துத்துவ கொள்கையில் இருந்துவிலகி விட்டதாகவும், அதனால் சிவசேனாவிற்கு திரும்ப வரும் பேச்சுக்கே இடமில்லை என்று ஷிண்டே தெரிவித்துள்ளார்.
ஆனால், சிவசேனா தலைவர்களையும், சிவசேனா தொண்டர்களையும் பாஜக சித்ரவதை செய்ததாகவும், இதற்கு முன்பு பாஜக சிவசேனாவை மிகவும் மோசமான முறையில் நடத்தியதால் அக்கட்சியுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த ஏக்நாத் ஷிண்டே, `பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவு செய்யவேண்டியது உங்களிடம் தான் இருக்கிறது. சூரத்தில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருவதை விரும்பவில்லை’ என்று உத்தவ் தாக்கரேயிடம் தெரிவித்திருக்கிறார்.
சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சூரத்தில் தொடர்ந்து தங்கி இருப்பது சரியாக இருக்காது என்று கருதிய பாஜக அவர்களை இரவோடு இரவாக அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்திக்கு விமானத்தில் அழைத்து சென்றுவிட்டது. குஜராத்தில் இருந்தால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மனம் மாறி சிவசேனாவுக்கு செல்லக்கூடும் என்ற அச்சமும் பாஜக-வுக்கு ஏற்பட்டது தான் இதற்கு காரணமாக பேசப்படுகிறது. இரவு மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் நட்டா ஆகியோர் அகமதாபாத் வந்து இப்பிரச்னை குறித்து ஆலோசனை நடத்திய பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே, நாங்கள் இன்னும் சிவசேனாவை விட்டுவிலகவில்லை என்றும் சிவசேனாவில் தான் இருக்கிறோம் என்றும், தங்களுடன் 40 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகவும், சுற்றுலாவுக்காக கவுகாத்தி வந்திருப்பதாக தெரிவித்தார். ஆனால் கவுகாத்தியில் தங்கி இருக்கும் மற்றொரு சுயேச்சை அமைச்சர் கச்சு காடு இது குறித்து அளித்த பேட்டியில், ``நாங்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகுதான் மும்பை வருவோம்” என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியிலும் 5 எம்.எல்.ஏ.க்கள் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருப்பதால் சிவசேனா ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள மிகவும் போராடவேண்டியிருக்கும் என்று கருதப்படுகிறது. சூரத்தில் ஷிண்டேயுடன் 25 முதல் 30 எம்.எல்.ஏ.க்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உண்மையில் எத்தனை பேர் இருக்கின்றனர் என்ற விபரம் தெரியவில்லை. 37 எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டேயுடன் சேர்ந்தால் கட்சி தாவல் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியும்.. அல்லது கர்நாடக போன்று ஷிண்டேயும் அவருடன் இருக்கும் எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்கலாம்.
மேலும் படிக்க மகாராஷ்டிரா: இரவோடு இரவாக அஸ்ஸாம் மாநிலத்துக்கு இடம் மாற்றப்பட்ட சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள்!