காரைக்காலை அடுத்த காரைக்கால்மேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் விசைப்படகில், கடந்த 2 -ம் தேதி ராஜ்குமாருடன் அருண், பழனிவேல், தண்டபாணி உள்ளிட்ட 15 மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்டனர். நேற்று முந்தினம் அதிகாலை 2 மணியளவில் மீனவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே இலங்கை - இந்திய சர்வதேச எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படை படகுகளில் விரைந்து வந்த வீரர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்களின் படகினை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர்.

பின்னர், மீனவர்களின் படகில் ஏறி அதிலிருந்த விலையுயர்ந்த மீன்களை அள்ளி தங்களின் படகில் ஏற்ற முயன்றதாக சொல்லப்படுகிறது. அப்போது நியாயம் கேட்ட மீனவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர். மேலும், மீன் அள்ளப் பயன்படுத்தும் சவுள், இரும்பு ராடு, இரப்பர் குழாய் கொண்டும் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் காரைக்கால்மேடு விசைப்படகின் உரிமையாளர் ராஜ்குமாருக்கு தலை மற்றும் உடலின் பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
மற்ற மீனவர்களும் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு ஆளாகினர். மீனவர்களின் படகிலிருந்து விலையுயர்ந்த மீன்கள், மீன்பிடி உபகரணங்கள், மீனவர்களின் கையிலிருந்த தங்க மோதிரங்கள் மற்றும் ஜி.பி.எஸ். கருவியையும் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த மீனவர்கள் தங்கள் தாக்கப்பட்டது குறித்து காரைக்கால்மேடு மீனவ பஞ்சாயத்தாருக்கும், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தந்தனர். நடுக்கடலிலிருந்து காரைக்கால் நோக்கி வந்த மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்தை அடைந்தனர். அவர்களைக் காரைக்கால் மேடு மீனவர்கள் காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அனைவருக்கும் அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதில் தலை, மற்றும் உடலெங்கும் பலத்த காயமுற்ற விசைப்படகு உரிமையாளர் ராஜ்குமாரின் உடல்நிலை மோசமானதால், அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காரைக்காலிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட சம்பவம் காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்ட மீனவக் கிராமங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க காரைக்கால்: நடுக்கடலில் தொடரும் இலங்கை கடற்படையின் தாக்குதல்! - ஒருவர் கவலைக்கிடம்