பீடி, புகையிலை போன்றவை உடலுக்கு கேடு விளைவிக்கும் ஆபத்தான பொருட்கள். அதனால் யாரும் புகைக்காதீர்கள் என்று தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்புரைகள் செய்யப்படுகிறது. பீடியைப் புகைத்தலே ஆபத்தானதென்றால் பீடி,புகையிலை கூட வாழும் மக்களில் வாழ்க்கையே தினமும் ஆபத்தில் உள்ளது. இந்தியாவில் பீடி சுற்றுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டு பல குடும்பம் வருமானம் ஈட்டுகிறது . பீடி தொழிலாளர்களின் வாழ்வாதாரமும், வாழ்க்கையுமே சிக்கல்கள் நிறைந்ததாகவே உள்ளது.

பீடி தொழில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக்காலத்தில் இந்தியாவில் அறிமுகமானது. இந்தியாவில் மட்டும் 12 மாநிலங்களில் பீடி தொழில் நடைபெறுகிறது. இந்தியாவில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பீடி தொழிலை மட்டும் நம்பி உள்ளனர். ஆரம்பத்தில் தொழிற்சாலை தொழிலாக இருந்த பீடி தற்போது. வீட்டிலேயே செய்யும் தொழிலாக மாறிவிட்டது. இதனால் பீடி தொழில் இடைத்தரகர்களால் நடைபெறுகிறது. பீடி சுற்றுவது பெரும்பாலும் பெண்களாகவே இருக்கின்றனர். இதற்குப் பல காரணங்கள் உண்டு.
தென்காசி மாவட்டம் பூலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பீடி தொழிலாளி சொர்ணம் பேசுகையில், "நான் 15 வயசிலிருந்து பீடி சுத்துறேன். என் கூட கிராமத்துல 500 பேர் சேர்ந்து சுத்துறாங்க. இந்த தொழில் ரொம்ப பாவப்பட்ட வேலைமா. ஆயிரம் பீடி சுத்துனாதான் இருநூத்து சொச்சமாச்சும் கிடைக்கும். புகையிலையை தினந்தினம் கையில தொடுறதாலயும் சுவாசிக்கிறதுனாலயும் 60 வயசு வரை வாழ வேண்டியவங்க எல்லாம் 40 வயசிலேயே செத்துபோயிறாங்க.

கிராமம்தானே விவசாயம் பண்ணலாம்னு நிறைய பேர் சொன்னாலும் சொந்தமா விவசாயம் பண்ண நிலம் இல்லையே. இந்த தொழிலால நோய் வந்தாலும், போதுமான கூலி இல்லனாலும் கடன் தொல்லைக்காகச் சுத்தி தானே ஆகனும். இதுல கிடைக்கிற வருமானம் குடும்பம் நடத்த போதுமானதா இல்லை" என்றார்.
பீடி தொழிலாளிகளின் உரிமைக்காகத் தொடர்ந்து வேலை செய்துவரும் செயற்பாட்டாளரும், நவ ஜீவன் அமைப்பின் இயக்குநருமான நளசந்திரசேகரன் பேசுகையில், "பீடி தொழிலாளர்களுக்கும் தொழிற்சாலை நிறுவனத்துக்கும் எந்த வித நேரடி தொடர்பும் இல்லை. இவர்களுக்கு இடையே இடைத்தரகர்கள் உள்ளனர். இடைத்தரகர்கள் பீடி சுற்றுவதற்குத் தேவையான பொருட்களைத் தொழிலாளர்களிடம் கொடுப்பார்கள், தொழிலாளர்கள் பீடிகளைச் சுத்திய பின் இடைத்தரகர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பீடி தொழிலாளிகள் ஒப்படைக்கும் பீடியில் பாதியைச் சரியாக சுத்தவில்லை என்று போலி காரணங்கள் சொல்லி உடைத்துவிட்டுப் பீடி தொழிலாளிக்குச் சேர வேண்டிய சம்பளத்தை முழுமையாகக் கொடுக்காமல் மோசடி செய்கின்றனர் இடைத்தரகர்கள். இதனால் பீடி தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். பீடி தொழிலாளர்கள் பெரும்பாலும் பெண்களாக இருப்பதால் இடைத்தரகர்கள் வார்த்தைகளால் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாகப் பெண்கள் கூறுகிறார்கள்.

பீடி தொழிலில் ஈடுபடும் பெண்கள் ஒரு நாளைக்குள் 1000 பீடி சுத்தி முடித்தால் தான் இருநூத்து சொச்சமாச்சும் கிடைக்கும் என்பதால் கழிவறைக்கு செல்லக் கூட நேரம் ஒதுக்காமல் பீடி சுற்றுவதில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். தொழிலாளர்கள் பீடியைத் தினமும் கையாள்வதாலும் இயற்கை உபாதைகளைச் சரி வர வெளியேற்றாத்தாலும் உடலில் பல பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர். மூச்சு திணறல், புற்றுநோய் போன்ற நோய்களால் வேதனைப்படுகின்றனர். நோய்களுக்கு மருத்துவம் பார்க்க மருத்துவமனைக்குச் செல்லக் கூட நேரம் ஒதுக்காமல் தொடர்ந்து பீடி சுற்றிக் கொண்டிருக்கின்றனர். கொரோனா காலத்தில் இவர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையிலிருந்தது. இவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியமும், சுயமரியாதையும் இங்கு மறுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதனைத் தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சகம் கண்டு கொள்ளவில்லை. புகை மக்களுக்குத் தீங்கு விளைவித்தாலும் புகையிலைக்கு திடீர் தடை விதித்தால் 5 லட்சத்துக்கு மேற்பட்ட பெண்கள் வேலை இழப்பர். அவர்கள் சம்பளத்தை எதிர்பார்த்து இருக்கும் குடும்பங்களில் அடிப்படைத் தேவை கூட கேள்விக்குறியாகிவிடும். அவர்களின் மாற்று வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அரசு கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.
ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளர் காசி விஸ்வநாதன் பேசுகையில், ``பீடி தொழிலில் மக்கள் ஈடுபடுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அடித்தட்டு மக்களுக்கு வேறு வேலைவாய்ப்பு இல்லாததாலும் பீடி சுத்துவது எளிதாக கத்துக்க கூடிய தொழிலாகவும் இருப்பதால் இந்த தொழிலில் பெரும்பான்மையான மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி, வேலூர் தென்காசி ஆகிய இடங்களில் பீடி தொழில் பரவலாக இருக்கிறது. பீடி தொழில் மூன்று வகையில் நடைபெறுகிறது. தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பீடியை சுத்துவது, இந்த முறை இப்போது பெரும்பாலான பகுதிகளில் நடைமுறையில் இல்லை. தொழிலாளர்கள் வீட்டிலிருந்து பீடி சுத்துவது. இந்த முறையில் பீடி சுத்த தேவையான பொருட்களை இடைத்தரகர்கள் தொழிலாளிகளிடம் ஒப்படைப்பர். சுத்துவதற்கான கூலியும் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும்.

மூன்றாவது முறை முற்றிலும் வேறுபட்டது. தொழிலாளர்கள் பீடி சுத்துவதற்குத் தேவையான பொருட்களை விலை கொடுத்து வாங்கி சுத்துவர். சுத்தி முடித்த பீடிகளை விலைக்கு விற்பர். இந்த முறையில் இடைத்தரகர்களால் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர். எத்தனை தொழிலாளர் நலச்சட்டங்கள் வந்தாலும் பீடி தொழிலாளர்களின் நிலை மாறவில்லை. இவர்கள் தொழிற்சாலையில் வேலை செய்யாமல் வீட்டிலிருந்து வேலை செய்வதாலும் பீடி தொழில் இடைத்தரகர்கள் மூலம் நடப்பதாலும் இவர்களைத் தொழிலாளர் என்ற வரையறைக்குள் அரசும் சமூகமும் பார்க்கவில்லை. ஆனால், இவர்களும் மற்ற தொழிலாளர்கள் போலக் கூலிக்கு வேலை செய்யும் சாமானிய மக்களே என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். பெரும்பகுதியான நிதி பீடி தொழிலை நிர்வாகம் செய்வதற்குச் செலவு செய்யப்படுகிறது. தொழிலாளர்கள் நலனுக்காகப் பெரிதளவில் நிதி ஒதுக்கப்படவில்லை. தடை செய்யப்பட்டால் பீடி தொழிலாளிகள் மாற்று வாழ்வாதாரம் குறித்து ஒன்றிய அரசிடமும், மாநில அரசிடமும் பதில் இல்லை. புகையிலை தொழிலாளர்களின் வாழ்வாதாரம், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இது குறித்து தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்களைத் தொடர்பு கொண்டோம். அவர், `பீடி தொழில் பரவலாகக் காணப்படும் மாவட்டங்களிலிருந்து அறிக்கை பெற்றபின் தொடர்பு கொள்கிறேன்’ என்றார்.
புகைப்பிடித்தல், பட்டாசு போன்றவை மனிதனின் ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. வருமானம் ஈட்டித்தரும் தொழிலில் எத்தனையோ ஆபத்துகள் இருந்தாலும் நம் மக்கள் கண்டுகொள்வதில்லை.

தொழிலில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு எப்படி குடும்பம் நடத்தலாம் என்பது தான் மக்களின் பெரிய கவலை. புகை மாசு ஏற்படுத்துவதாக இருந்தாலும் பீடி தொழிலாளர்களுக்கு மாற்று வாழ்வாதாரம் ஏற்படுத்தாமல் திடீரென்று தடை விதிப்பது வறுமைக்கு வழிவகுக்கும். முதலில் பீடி தொழிலாளர்களின் மாற்று வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அரசு முயற்சி செய்ய வேண்டும்.
மேலும் படிக்க `சட்டங்கள் வந்தாலும் இவர்கள் நிலை மாறவில்லை’ - பீடி சுற்றும் பெண்களின் துயரங்களைப் போக்குமா அரசு?