டெல்லி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குற்றங்கள் அதிகமாக நடக்க ஆரம்பித்துள்ளது என்கிறது புள்ளிவிவரங்கள். டெல்லி அருகில் உள்ள காஜியாபாத் என்ற நகரத்தில் வசிப்பவர் சவிதா. இவரின் கணவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். அவரின் கணவர் சந்திர வீர்-ஐ அவரின் சகோதரர் கடத்தி சென்றுவிட்டதாக போலீஸில் புகார் செய்திருந்தார் சவிதா. இது குறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில் எந்த வித துப்பும் துலங்காமல் இருந்தது. சமீபத்தில் இவ்வழக்கில் போலீஸாருக்கு துப்பு கிடைத்தது. சந்திர வீரின் மனைவி சவிதாவுக்கு அவர் காணாமல் போனதில் தொடர்பு இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சவிதாவை பிடித்து மீண்டும் விசாரித்த போது உண்மையை ஒப்புக்கொண்டார். சவிதாவிற்கும் அவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அருண் என்பவருக்கும் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டு இருக்கிறது. இவர்களது காதலுக்கு சந்திரவீர் தடையாக இருந்தார். இதனால் சவிதாவும், அருணும் சேர்ந்து சந்திரவீரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர்.

அதோடு அரிவாளாலும் வெட்டியுள்ளனர். சந்திரவீரை கொலை செய்வதற்கு முன்பே அருண் வீட்டில் ஆழமான குழி ஒன்றை தோண்டி தயார் நிலையில் வைத்திருந்தனர். அதன் பிறகு சந்திரவீரை கொலை செய்து 7 அடி ஆழமான குழியில் போட்டு புதைத்துவிட்டனர். இது குறித்து போலீஸ் அதிகாரி தீக்ஷா சர்மா கூறுகையில், ``சவிதாவும், அருணும் சேர்ந்து சந்திரவீரை கொலை செய்து அருண் வீட்டில் புதைத்துவிட்டனர். பின்னர் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் சிமெண்ட் தளம் அமைத்து அந்த வீட்டில் அருண் வசித்து வந்தார். தற்போது தோண்டிப்பார்த்ததில் சந்திரவீர் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, அரிவாள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
நேற்றுத்தான் டெல்லியில் தன்னுடன் லிவ்-இன் உறவில் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை கொலை செய்து, பல துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்ததாக செய்தி வந்தது. அதற்குள் மேலும் ஒரு கொடூர கொலை நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க டெல்லி: திருமணம் மீறிய உறவு... 4 ஆண்டுக்கு முன்பு கணவனை கொன்று ஆண் நண்பரின் வீட்டில் புதைத்த மனைவி!