இந்த எபிசோடில் நிகழ்ந்த சில உரையாடல்களும் அதன் பின்னால் இருந்த சம்பவங்களும் காரணங்களும் முக்கியமானவை. மனித குணாதிசயங்களை நாம் புரிந்து கொள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பு. என்னவென்று விரிவாகப் பார்ப்போம்.

நாள் 29-ல் நடந்தது என்ன?
கமலின் பிறந்த நாள் என்பதால் ‘பத்தல.. பத்தல’ பாடலை காலையில் அலற விட்டார் பிக் பாஸ். கிச்சன் ஏரியாவில் சுற்றுவதை நிரந்தர வழக்கமாக வைத்துள்ள ராபர்ட், காலையிலேயே அதை துவக்கி விட ‘குளிக்காம இந்தப் பக்கம் வரக்கூடாது’ என்று தனலஷ்மி ஜாலியாக ஆட்சேபித்தார். அதைப் பற்றி ரச்சிதாவும் எதுவும் சொல்லாமல் இருக்க ராபர்ட் உள்ளுக்குள் காண்டானார். பிறகு வந்த சம்பவங்களில் இது இன்னமும் தெளிவாகத் தெரிந்தது. (பிக் பாஸ் டீம் காட்டும் துண்டு துண்டான காட்சிகள் எத்தனை முக்கியமானவை என்பது எபிசோடின் இறுதியில் இணைத்துப் பார்த்தால் நமக்கு தெளிவாகப் புரியும்).
தள்ளி விட்டுத் தலைவரான மைனா
“பாரு.. ஜனனி கப்பை கழுவாமயே வெச்சிருக்கா” என்று ஏடிகேவிடம் அனத்திக் கொண்டிருந்தார் ராம். “அப்ப.. அவ கிட்டயே நேரா கேட்டுடு” என்று ஏடிகே ஆலோசனை தர “எதுக்குப்பா வம்பு.. ‘என்னோடது இல்ல’ன்னு சொல்லிடுவா.’ என்று ராம் ரிவர்ஸ் கியர் போட, “அப்படின்னா ஏன் என் கிட்ட சொல்றே?” என்று ஏடிகே காண்டாக, “ஏண்டா. நீ வேற.. நானே நொந்து போயிருக்கேன்’ என்கிற மாதிரி பேசினார் ராம். பலர் பிரச்சினையை நேரடியாகப் பேசித் தீர்க்காமல் அதைப் பற்றி அனத்துவதிலேயே சுகம் கண்டு காலத்தைக் கடத்துவார்கள்.
இந்த வாரத்திற்கான தலைவர் போட்டியை அறிவித்தார் பிக் பாஸ். ஸ்கை போட்டில் கால்களை நுழைத்துக் கொண்டு நடக்க வேண்டும். யார் கீழே விழாமல் இறுதி வரை தாக்குப் பிடிக்கிறாரோ, அவரே தலைவர். ராபர்ட், அமுதவாணன், மைனா ஆகிய மூவரும் இதில் கலந்து கொண்டார்கள். ஆரம்பித்த சில நிமிடங்களில் ராபர்ட் தடுமாறி விழுந்து வெளியேற, அமுதவாணனை தள்ளி விட்டு தலைவரானார் மைனா. அப்போதைக்கு மைனாவின் வெற்றியை ஏற்றுக் கொண்டது போல் காணப்பட்ட அமுதவாணன், பிறகு “தள்ளலாமா... இத்தனை ஈஸியான போட்டில தோத்துட்டனே..” என்று அப்செட் ஆனார். (தள்ளலாம் என்பது ரூல் புக்கில் அறிவிக்கப்பட்டது).

அணிகள் பிரிக்கும் நேரம். கிச்சன் டீமில் மறுபடியும் ரச்சிதா, ராபர்ட்டை இணைத்து வைத்து அழகு பார்த்தார், புதிய தலைவரான மைனா. பாத்திரம் கழுவும் அணியின் தலைவராக ராமை நியமித்தது ஒரு நல்ல முடிவு. ‘ஒவ்வொரு நாளின் இறுதியிலும் அணித்தலைவர்களுடன் நான் பேசுவேன்’ என்று மைனா சொன்னதற்கு ‘அது வேலைக்கு ஆகாது.. எல்லோர் கிட்டயும் பேசுங்க’ என்று விக்ரமனும் அசிமும் ஆட்சேபணை சொன்னது முறையானதல்ல. பிறகு எதற்கு டீம் கேப்டன் பொறுப்பு?!
வாக்களித்தபடி தன் பிறந்தநாளை முன்னிட்டு பிரியாணி அனுப்பியிருந்தார் கமல். “ ஐ சோறு போடறாங்க..’’ என்கிற ரேஞ்சிற்கு மக்கள் ஆர்வத்துடன் பறந்தார்கள். பாவம்.
ஆயிஷாவிற்கு ஜனனி தந்த அட்வைஸ் மழை
சோர்ந்து போய் முடங்கியிருந்த ஆயிஷாவிற்கு ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார் ஜனனி. “எனக்கு நான்தான் தலைவர் என்று நினைச்சுக்கோ.. ஏன் பயப்படற.. உன்னை நீயே தாழ்த்தி யோசிக்காத... கோபம் வந்தால் காட்டு.. ஸ்ட்ராங்கா இரு.. ஒரு விஷயத்தை பாசிட்டிவ்வா பாரு. அவசியம் தேவைப்பட்டா நடி. மத்தவங்களைப் பாரு.. கெத்தா.. மாஸா.. இரு’.. என்றெல்லாம் பயிற்சியாளர்களுக்கு கோச் சொல்வதைப் போன்ற அட்வைஸை ஜனனி தர ஆயிஷாவின் முகத்தில் சற்று மலர்ச்சி வந்தது. (பின்னணியில் ஒரு பரபரப்பான இசையை இணைத்திருந்தால் மாஸான காட்சியாக வந்திருக்கும்).

கடந்த வாரம் முழுக்க சோர்வாக இருந்த ஆயிஷா, திடீரென உற்சாகமாகி “கேப்டன்.. எனக்கு ஏதாவது பொறுப்பு கொடுங்க..” என்று கேட்க அவரை ‘க்ளீனிங் டீம் கேப்டனாக்கி’ அழகு பார்த்தார் மைனா. ஜனனி தந்த அட்வைஸின் எபெக்ட்டோ அல்லது நாமினேஷன் நாள் என்பதாலோ அல்லது பிரியாணி காலியாகி விடப் போகிறது என்கிற பதட்டமோ.. எப்படியோ.. ஆயிஷா மறுபடியும் உற்சாகமாகியிருப்பது நன்று. இது நீடிக்கிறதா என்று பார்ப்போம்.
பிரியாணி சாப்பிட்ட மயக்கம் காரணமாகவோ, என்னவோ, விக்ரமன் தூங்கிக் கொண்டிருக்க, க்ளீனிங் டீமில் இருந்த அமுதவாணன் கோபத்துடன் அனத்திக் கொண்டே சாப்பாட்டு மேஜையை துடைத்தார். “நான் மட்டும் கேப்டன் ஆகியிருந்தா.. ஹிட்லர்தான்.. வேலை செய்யாம நல்லா பேசறவங்கதான் கெத்தா இருக்காங்க...’ என்றெல்லாம் அமுதவாணனின் புலம்பல் நீண்டது.
அசிம், ஏடிகே - நட்பிற்குள்ளே ஒரு பிரிவொன்று வந்ததே!
அசிமை பல சமயங்களில் ஆதரித்து ஒரு நல்ல நண்பனாக இருக்கிறார் ஏடிகே. ஆனால் ஒரு சபையில் பேசும் போது, தன்னை விவகாரமாக அசிம் கோத்து விட்டு வேடிக்கைப் பார்க்கிறார் என்கிற சங்கடமும் கோபமும் ஏடிகேவிற்கு வரத் துவங்கியிருக்கிறது. நம் நண்பர்களின் கூட்டத்திலும் இதைப் பார்க்கலாம். தனியாகப் பேசும் போது உருக்கமாக பேசுவார்கள். ஆனால் கூட்டத்தில் அவர்களின் காமெடிக்கு நம்மை ஊறுகாயாக மாற்றி வேடிக்கை பார்ப்பார்கள். சில குண்டூசிகள் எல்லை தாண்டும் போது வலிக்க ஆரம்பித்து விடும். அதுதான் இப்போதும் நடந்தது.
“உனக்கு தைரியம் இருந்தா ஏடிகேவை நாமினேட் பண்ணிப் பாரேன்” என்று மணிகண்டனிடம் சொல்லி விளையாட்டாக பேச்சை ஆரம்பித்தார் அசிம். சிரிப்புடன் ஆரம்பித்த இந்த உரையாடலில் மெல்ல மெல்ல குண்டூசிகள் வெளிப்பட ஆரம்பித்தன. “குழந்தையை ரகசியமா கிள்ளி விட்டுட்டு.. அப்புறம் அதைக் கொஞ்சி பெற்றோர்களிடம் நல்ல போ் வாங்கறதுதான் அசிமின் ஸ்டைல்.. ‘வாடா மச்சான்.. பேசலாம்..ன்னு அவன் சொன்னாலே.. சில விஷயங்களை காமிரா முன்னால் பதிவு செய்யப் போறான்னு அர்த்தம். நாம உஷாராகி ஒதுங்கிடணும் ” என்று பதிலுக்கு ஏடிகேவும் அசிமின் கேரக்ட்டரை ஜாலியாக பங்கம் செய்தார்.

அசிம் தமிழ் பேசும் பாணியை ஏடிகே விளையாட்டாக செய்து காட்ட “நீ தமிழை கொச்சைப்படுத்திறியா..” என்று வில்லங்கமான ஆட்டத்தை ஆட ஆரம்பித்தார் அசிம். “நானும் தமிழன்தான்.. நீ செய்யற பாடி லேங்வேஜைதான் சொன்னேன்” என்று ஏடிகே விளக்கம் அளிக்க “எங்கு பிறப்பினும் தமிழன்.. தமிழன்தான். இங்கு பிறப்பினும் அயலான்.. அயலான்தான்.’ என்கிற வில்லங்கமான கோஷத்தை அசிம் மறுபடியும் ஊத ஆரம்பித்து விட்டார். இந்த சீசனின் துவக்க நாளிலேயே கமல் இதை திருத்த முயன்ற போதும் அசிம் இன்னமும் மாறவில்லை. அசிமின் கோஷம், ஆபத்தான பிரிவினைவாதத்தைக் கொண்டது.
அது விளையாட்டாகவே இருந்தாலும் தன்னை தமிழ் மொழி விரோதியாக அசிம் சித்தரிப்பது குறித்து ஏடிகே அடைந்த ஆட்சேபத்தில் நியாயமுள்ளது. ஏனெனில் இது பல லட்சம் பேர் பார்க்கும் நிகழ்ச்சி. இதில் தனது இமேஜ் டேமேஜ் ஆகக்கூடாது என்று ஏடிகே நினைப்பது சரியே. ‘தமிழ் உணர்வு உள்ள எவரும் தமிழர்கள்தானே?!” என்று விக்ரமன் இந்த விவகாரத்தை அணுகிய விதம் அரசியல் முதிர்ச்சி கொண்டது.
‘யாதும் ஊரே. யாவரும கேளிர்..ன்றது.. நம் பண்பாட்டில் உள்ளதே..” என்று இன்னொரு சமயத்தில் இதைப் பற்றி விக்ரமன் குறிப்பிட்டதும் சரியான அணுகுமுறை.
தனலஷ்மி – பிள்ளைப் பூச்சிக்கு கொடுக்கு கிடைத்த கதை
ஸ்கிராட்ச் கார்டு போட்டியில் வென்றார் தனலஷ்மி. ‘மற்றவர்களுக்கு இலவச ஆலோசனை சொல்ல வேண்டும்’ என்பதுதான் அவருக்கான பரிசு. ‘இந்தப் பிள்ளைப் பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு யார் எதிர்பார்த்தா?’ என்கிற மைண்ட் வாய்ஸூடன் மற்றவர்கள் இருந்தார்களோ, என்னமோ.. சபையின் நடுவில் நின்று அட்வைஸ் மழையை ஆரம்பித்தார் தனலஷ்மி. “மாஸ்டர்.. நீங்க கிச்சன் ஏரியாவுலேயே இருக்காம... வேற சைட்ல கூட உலாத்தலாம்” என்று ராபர்ட்டில் ஆரம்பித்து “பேசணுமேன்னு பேசக்கூடாது. இரண்டு தரப்பையும் விசாரிச்சுட்டு பேசணும்” என்று அசிம் வரை அட்வைஸ் தந்து முடித்தார் தனலஷ்மி.

``ஒருத்தரோட கேரக்ட்டரை புரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்த மாதிரி அவங்க சொல்றதைப் புரிஞ்சுக்க டிரை பண்ணுங்க” என்று தனலஷ்மி சொன்ன அட்வைஸ் தொடர்பாக பிறகு சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தார் விக்ரமன். தன் கமெண்ட்டினால் ஏடிகே புண்பட்டிருக்கிறார் என்பது அசிமிற்கு தெரிந்ததோ, என்னமோ.. அவரிடம் சில விளக்கங்களைச் சொல்ல, இருவரும் சமாதானம் ஆனார்கள். என்றாலும் கூட ஏடிகேவிற்கு நெருடல் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை பிறகு நம்மால் உணர முடிந்தது. விக்ரமனிடம் அதைப் பற்றி அனத்திக் கொண்டிருந்தார்.
நாமினேஷன் சடங்கு ஆரம்பித்தது. உடல்நலப் பிரச்சினையை சுட்டிக் காட்டி ஆயிஷாவின் மீது சில முத்திரைகள் விழுந்தன. ‘அமுதவாணன் எஸ்கேப் ஆயிட்டே இருக்காரு.. அவர் நாமினேஷன்ல வந்தாகணும்’ என்கிற காரணத்தை ஜாலியாக சொன்னார் ஆயிஷா. கடந்த வாரத்தைப் போலவே இந்த முறையும் மக்கள் சொன்ன காரணங்களை பொதுவில் சொல்லி கோத்து விட்ட பிக் பாஸ், பட்டியலின் முடிவை அறிவித்தார்.
ஏடிகே, மகேஸ்வரி, ராம், தனலஷ்மி, அசிம், விக்ரமன் மற்றும் ஆயிஷா ஆகியோர்தான் இந்த வாரம் நாமினேட் ஆன நபர்கள்.
“இங்க க்ரூப்பிஸம் இருக்கு, ஆனா நான் க்ரூப்ல இல்ல" – அசிமின் நகைச்சுவை
நாமினேஷன் பட்டியல் குறித்த விவாதங்கள், யூகங்கள் ஆங்காங்கே நடைபெற்றன. தன்னுடைய பெயர் வந்தது குறித்து கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரமும் ஆச்சரியப்பட்டார் விக்ரமன். ‘இவங்க கிட்ட பெரியவங்களே பேச பயப்படறாங்க’ என்கிற காரணம், தன்னைக் குறித்துச் சொல்லப்பட்டதாக இருக்கும் என்பதை சரியாகக் கண்டுபிடித்து விட்ட தனலஷ்மி அது குறித்து அப்செட் ஆகி அமர்ந்திருந்தார். “ஏம்மா.. மைக்கைப் போடலைன்னு ஒரு முறை கேட்டதுக்கு குயின்சி இன்னிக்கு வரைக்கும் என் கூட பேசலை” என்று இன்னொரு பக்கம் அனத்திக் கொண்டிருந்தார் ஏடிகே.

“நான் எந்த குரூப்லயும் இல்லை. ஆனா இங்க குரூப்பிஸம் இருக்கு..” என்று சில கூட்டணிகளைச் சொன்ன அசிம், ஏடிகேவின் பெயரையும் ஒரு க்ரூப்பில் ஜாலியாக சோ்க்க “இதுதான் வேணாங்கறேன்..” என்று சற்று சீரியஸ் ஆனார் ஏடிகே. “அமுதவாணன் ஜனனியை தன் கண்ட்ரோல்லயே வெச்சுப்பார்.. வெளில அனுப்ப மாட்டார்.. ஜனனிக்கும் அதுதான் சேஃப்ன்னு தெரியும்..” என்று அந்த அணியில் உள்ள அரசியலை ஆராய்ந்து கொண்டிருந்தார் அசிம்.
ரச்சிதா Vs ராபர்ட் – சிரிப்பும் சீரியஸூம் கலந்த விளையாட்டு
‘ராபர்ட் மாஸ்டர் கிச்சன் ஏரியாவிலேயே சுற்றுகிறார்’ என்று தனலஷ்மி சொன்ன அட்வைஸ், அதை ரச்சிதாவும் விளையாட்டாக வழிமொழிந்தது ஆகிய காரணங்களால் அப்செட் ஆகியிருந்த ராபர்ட், ‘இனிமே கிச்சன் பக்கமே போகப் போறதில்லை.. இதெல்லாம் சும்மா விளையாட்டுக்குத்தானே. பண்றோம்.. எனக்கு ஒரு கேர்ள் பிரெண்டு வெளிய இருக்கா..” என்றெல்லாம் கதிரவனிடம் அனத்திக் கொண்டிருந்தார். தன் இமேஜ் குறித்து கவலை கொள்கிற ராபர்ட், ஏன் இந்த விளையாட்டை விடாமல் நீட்டிக்க வேண்டும்?!

ரச்சிதா இருக்கும் திசை பக்கமே திரும்பாமல் வீறாப்புடன் உலாத்திக் கொண்டிருந்த ராபர்ட்டிடம் “ஏன் சின்னப்புள்ள மாதிரி பண்றீங்க..” என்று ஷிவின் அறிவுரை சொன்னாலும் ராபர்ட்டின் வீம்பு குறையவில்லை. “இந்த மாதிரி பண்றது சரியா.. நான் நார்மலாத்தானே இருக்கேன்.. அவரும் அதே மாதிரி இருக்கலாமில்ல. ‘ஒரு குழந்தை மாதிரி’தான் அவர் பண்றதை நான் பார்க்கறேன்... எங்க போனாலும் இந்தப் பிரச்சினை எனக்கு இருக்கு.” என்று ஷிவனிடம் புலம்பிக் கொண்டிருந்தார் ரச்சிதா. பெண்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளுள் ஒன்று, தன்னிடம் வழியும் ஆண்களை சாமர்த்தியமாக சமாளிப்பது. பலமாக கண்டித்தால் “நான் சும்மா விளையாட்டுக்குத்தானே சொன்னேன்” என்று ஆண்கள் ரிவர்ஸ் கியர் போட்டு பம்முவார்கள். ‘சரி.. விட்டுப் பிடிப்போம்’ என்று சகித்துக் கொண்டு போனால் அதிக அட்வான்டேஜ் எடுக்க முயல்வார்கள்.
பிறகு அந்த சரித்திரப் புகழ்பெற்ற சமாதான உரையாடல் ஆரம்பித்தது. ராபர்ட்டை அழைத்து ரச்சிதா பேசிய அந்தப் பாணி இருக்கிறதே?! அடடா!..பெண்கள் எத்தனை நுட்பமான அறிவையும் நடைமுறை சாமர்த்தியங்களையும் கொண்டவர்கள் என்பதற்கான உதாரணம் அது.
“ஏன்.. இப்படி அப்நார்மலா நடந்துக்கறீங்க. நார்மலா இருங்களேன்.. ப்ளீஸ்.. நீங்க என்னை எவ்வளவு கலாயக்கறீங்க. பதிலுக்கு நானும் ஒண்ணு சொல்லக்கூடாதா.. தனலஷ்மி சொன்னதெல்லாம் எனக்கு மேட்டர் இல்ல. நீங்க துறுதுறுன்னு இருக்கற ஆசாமி. திடீர்னு டல்லாயிட்டா.. எல்லோரும் என்னைத்தானே திரும்பிப் பார்ப்பாங்க.. மத்தவங்க கிட்ட பேசற மாதிரி என் கிட்டயும் இயல்பா பேசுங்க.... புரியுதா” என்று கம்பும் உடையாமல் பாம்பிற்கும் வலிக்காமல் ரச்சிதா சொன்னது ஆரம்பத்தில் ராபர்ட்டிற்கு புரியாமல் போனாலும் இறுதியில் சம்மதத்துடன் தலையசைத்தது ரச்சிதாவின் வெற்றி.

பிக் பாஸில் நடக்கும் சம்பவங்களில் வம்புகளை மட்டுமே தேடாமல், மனித குணாதிசயங்களுக்குள் நிகழும் சடுகுடு போட்டிகளைக் கவனிப்பதும், அவற்றில் இருந்து நாமும் பாடம் கற்றுக் கொள்வதும் இந்த நிகழ்ச்சியில் இருந்து பெறக்கூடிய பலனாக இருக்கும்.
மேலும் படிக்க பிக் பாஸ் 6 நாள் 29: `என்கிட்ட இயல்பா பேசுங்க! ராபர்ட் - ரச்சிதா உரையாடல்; அசிமின் `தமிழன்' விவகாரம்