Doctor Vikatan: நான் பத்து வருடங்களாக தலைமுடிக்கு டை உபயோகித்து வருகிறேன். என்னுடைய பிரச்னையே, டை அடித்த அடுத்த வாரமே மீண்டும் முடி வெள்ளையாகிவிடுவதுதான். எத்தனை நாள்களுக்கொரு முறை டை அடிப்பது சரியானது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.

சாதாரணமாக ஒரு மாதத்துக்கு ஒருமுறை டை உபயோகிப்பதில் தவறில்லை. கெமிக்கலோ, இயற்கையானதோ.... எந்த வகை டையிலும் நச்சுத்தன்மை இருக்கவே செய்யும். எனவே டை தடவிக்கொண்டு காத்திருக்கும் அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்துவிடுங்கள். அடுத்து சிறுநீர் கழிக்கும்போது டையினால் உடலுக்குள் சேர்ந்த நச்சு வெளியேறிவிடும்.
டை உபயோகிக்கும்போது குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் வைத்திருப்பதைத் தவிர்க்கவும். குறிப்பிட்ட நேரத்தில் தலையை அலசிவிட வேண்டும். தலைக்குக் குளிக்கும்போது வாயையும் கண்களையும் மூடிக்கொண்டு அலசவும்.
'காஸ்ட்லியான டைதான் உபயோகிக்கிறேன்... ஆனால் எனக்கு அது நிற்பதே இல்லை... சட்டென வெள்ளையாகிவிடுகிறது' என்று பலர் புலம்புவதைப் பார்க்கலாம். தலைமுடி மிகவும் எண்ணெய்ப் பசையோடு இருப்பவர்களுக்குத்தான் டை நிற்காது. நம்முடைய சருமமானது சீபம் என்ற எண்ணெயைச் சுரக்கும். சருமத்தின் உள்ளே உள்ள செபேஷியஸ் சுரப்பியின் வழியே சுரக்கும் அந்த எண்ணெயானது வெளியே கசியும். அது முடியின் வேர்க்கால்களிலும் படியும். அதனால்தான் தலைக்குக் குளித்த இரண்டாவது நாளே தலைமுடி பிசுபிசுப்பாக மாறும். தலைமுடியில் எண்ணெய் தடவியதுபோலவே இருக்கும்.

இந்த எண்ணெய்ப்பசையானது தலைமுடியில் போடப்படும் டையின் நிறத்தை எடுக்கக்கூடிய தன்மை கொண்டது. எந்த டையும் மாதக் கணக்கில் நீடிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அது ஆரோக்கியமானதே இல்லை. சீக்கிரம் நரைத்தாலும் மறுபடி ரீடச் செய்துகொள்வதில் தவறில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: எத்தனை நாள்களுக்கொரு முறை ஹேர்டை பயன்படுத்தலாம்?