சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் ரயில்வே ஸ்டேஷன்கள் மோசமான நிலையில் இருக்கிறது. பல ரயில்வே ஸ்டேஷன்களில் லிப்ட் வேலை செய்யவில்லை. கழிவறைகள் மூடப்பட்டிருக்கிறது. மின் விளக்குகள் எரியவில்லை. முழுவதும் இருட்டாக காட்சியளிக்கிறது. இதனால் பயணிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே இந்த ரயில்வே ஸ்டேஷன்களை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது அதற்கான பணி விரைவில் தொடங்கவிருக்கிறது. இதை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (கும்டா), சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ), சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து செய்யவிருக்கிறது. இதில் புதிய என்ஜின், ஏசி கோச், வணிக வளாகங்கள், உணவங்கள், வாகன நிறுத்தம் போன்ற பல்வேறு நவீன வசதிகள் இடம்பெறுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் சிறப்பு அதிகாரி ஜெயக்குமார், "பறக்கும் ரயில்களை தற்போது தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. இதில் மத்திய அரசின் நிதியும், மாநில அரசின் நிதியும் இருக்கிறது. இதில், ரயில்வே ஸ்டேஷன் கட்டடங்கள் மிகவும் பழமையாக இருக்கிறது. பயணிகளுக்கு பாதுகாப்பு குறைவாக இருக்கிறது போன்ற பல்வேறு பிரச்னைகள் இருக்கிறது. இதனால் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

எனவே இதை எப்படி மேம்படுத்த வேண்டும் என்று யோசிக்கப்பட்டது. அப்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பறக்கும் ரயில்களை செயல்படுத்தினால் சரியாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடந்து வந்தது. ஏனெனில் இதில் பணம் முதலீடு செய்ய வேண்டும். மேலும் என்ன மாதிரியான வசதிகளை கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து திட்டமிட வேண்டியிருந்தது.
இதில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (கும்டா) தலையிட்டு ஆலோசனை நடத்தியது. இதன்படி இந்த திட்டத்தை 2 கட்டங்களாக செயல்படுத்த முடிவுசெய்திருக்கிறோம். ஸ்டேஜ் 1-ல் ரயில் தண்டவாளங்கள், ரயில்களை இயக்குதல், சிக்னல் இயக்கம் போன்றவற்றை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளும். மறுபுறம் ஸ்டேஜ் 2-ல் ரயில்வே ஸ்டேஷன்களை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) செயல்படுத்தும்.
இதை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பனி விரைவில் தொடங்கவிருக்கிறது. இதில் ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் எவ்வளவு இடம் காலியாக இருக்கிறது. அதில் என்ன வசதிகள் கொண்டுவரலாம் என்றும், ஸ்டேஷன்களில் அறிவிப்பு பலகை உள்ளிட்ட இதர வசதிகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த விவரம் இடம்பெறும்.

மேலும் ஸ்டேஜ் 1-க்கான திட்ட அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். இதற்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால் பணிகள் விரைவில் தொடங்கும். இதுதவிர ஒவ்வொரு ஸ்டேஷன்களின் அருகிலும் 500 மீ தூரத்திற்கு தரமான சாலைகள், தெருவிளக்கு வசதி போன்றவற்றையும் கொண்டுவர முடிவு செய்திருக்கிறோம். இதை, சென்னை மாநகராட்சியின் உதவியுடன் செய்வதற்கு முடிவு செய்திருக்கிறோம். இதன் மூலம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
மேலும் பறக்கும் ரயில்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் கையகப்படுத்துவதற்கும், கையகப்படுத்திய பிறகு செயல்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என திட்டமிடுவதற்கும் ஒரு பிரத்யேக குழு அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். இந்த குழு தற்போது தெற்கு ரயில்வே சம்மந்தப்பட்ட திட்டத்தில் எவ்வளவு செலவு செய்திருக்கிறது, மெட்ரோ எவ்வளவு தொகை மேற்கொண்டு செலவிட வேண்டும்.

அனைத்து பெட்டிகளையும் ஏ.சி யாக மாற்றம் செய்தல், புதிய ரயில் என்ஜின் பயன்படுத்துதல் போன்றவற்றுக்கு செய்ய வேண்டியது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கும். இந்த பணிகள் அனைத்தும் முடித்து திட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்கு 18-ல் இருந்து 24 மாதங்கள் ஆகிவிடும். ஒரு, ஒரு படியாக நாம் தற்போது முன்னேறிக்கொண்டு இருக்கிறோம்" என்றார்.
மேலும் படிக்க சென்னை: 'பறக்கும் ரயில்வே ஸ்டேஷன்கள் மறுசீரமைப்பு' - நவீன என்ஜின், ஏசி கோச் போன்ற வசதிகள் வருகிறது!