நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த அரியாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி முருகேசன் (65), பாப்பா (60). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைத்த நிலையில், அவரவர்கள் கணவருடன் தனித்தனியே வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில், தங்களின் தாய், தந்தையரான முருகேசன், பாப்பா இருவரையும் தங்களுடன் வைத்துக்கொள்ளாமல், இருவரையும் தனியே வசிக்கவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதனால், வயதான தம்பதி, அப்பளம் போடும் தொழிற்சாலையில் கூலி வேலை செய்துவந்துள்ளனர். அதில் கிடைத்த கூலிப் பணத்தை வைத்து, காலத்தை நகர்த்தி வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனிடையே , இருவருக்கும் அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். 'மகள்கள் இருவரும் எங்களைப் பார்த்துகொள்ளவில்லை, மருத்துவ சிகிச்சை எடுக்க உதவவில்லை' என்று இருவரும் அக்கம்பக்கத்தினரிடம் புலம்பிவந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இரண்டு மகள்கள் இருந்தும் தங்களைக் கவனித்துக்கொள்ள யாரும் இல்லை என மனமுடைந்த தம்பதி, நேற்று முன்தினம் (4 - ம் தேதி) இரவு 10 மணிக்கு வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துள்ளனர்.

இதில், முருகேசன் அதிகப்படியாக வாந்தி எடுத்துக்கொண்டு அலறியிருக்கிறார். அப்போது, அந்த வழியாக வந்த முருகேசனின் தம்பி, பூச்சிமருந்தைக் குடித்த இருவரையும் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துவந்து சிகிச்சைக்குச் சேர்த்துள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி தம்பதி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்தச் சம்பவம் குறித்து, நாமகிரிப்பேட்டை காவல் நிலைய போலீஸார், வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். தங்களுக்கு அனுசரணைக் காட்ட யாருமில்லை என்ற விரக்தியில் வயதான தம்பதி தற்கொலை செய்துகொண்டு இறந்த சம்பவம், அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க `2 மகள்கள் இருந்தும், கவனிக்க யாருமில்லை' - விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட வயதான தம்பதி