சென்ட்ரல் விஸ்டா எனும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் பிரத்யேகப் படங்களை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இந்தப் புகைப்படங்கள்தான் கடந்த சில நாள்களாக இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்ப்போம்.

சன்சத் பவன் Vs சென்ட்ரல் விஸ்டா:
`சன்சத் பவன்' என அழைக்கப்படும் தற்போதைய நாடாளுமன்றக் கட்டடம் சுமார் 96 ஆண்டுகளுக்கு முன்பு, 1927-ல் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. பழைமையான கட்டடம் என்பதால் பாதுகாப்பு மற்றும் இடவசதிகள் காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டவேண்டும் என்ற கோரிக்கை, பரிந்துரைகள் 2010-ம் ஆண்டுவாக்கில் எழுந்தது. நீண்ட ஆண்டுகளாக பரிந்துரையில் இருந்துவந்த இந்தத் திட்டத்துக்கு, பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10-ம் தேதி அடிக்கல் நாட்டினார். நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவதற்கு மட்டுமே சுமார் ரூ.971 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டு, அதன் கட்டுமானப் பொறுப்பு டாடா நிறுவன குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 2022 நவம்பர் மாதம் முழு கட்டுமானப் பணிகளும் நிறைவடையும் என மத்திய அரசு கூறிய நிலையில், இன்னும் கூடுதலாக 3 மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, வரும் மார்ச் 2023-ல் புதிய கட்டடம் திறக்கப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதியும், புதிய நாடாளுமன்றக் கட்டடத்திலேயே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ட்ரல் விஸ்டாவின் சிறப்பம்சங்கள்:
புதிய நாடாளுமன்றக் கட்டடம் சுமார் 64,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் முக்கோண வடிவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த புதிய கட்டடத்தினுள் அதிநவீன அரசியலமைப்பு மண்டபம் (state-of-the-art Constitutional Hall), நவீன ஆடியோ-விஷுவல் வசதிகளுடன் கூடிய ஆலோசனைக் கூட்ட அரங்குகள், எம்.பி.க்கள் ஓய்வுவெடுக்கும் அறைகள், நிலைக்குழுக்களுக்கான அறைகள், உணவகம் மற்றும் நூலகமும் இடம்பெற்றிருக்கின்றன.

மிக முக்கியமாக மக்களவை, மாநிலங்களவை கூட்டங்களுக்காக தற்போது இருப்பதை விட அதிகமான உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் வகையில் அதிக இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, தற்போது மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 543, மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 245. அதற்கேற்ற வகையில்தான் தற்போதைய நாடாளுமன்றக் கட்டடத்தின் இரு அவைகளின் இருக்கைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மக்களவையில் 888 இருக்கைகள், மாநிலங்களவையில் 384 இருக்கைகள் என மொத்தம் 1272 இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், இரு அவைகள் இணைந்த கூட்டத்தினைக்கூட எளிதில் நடத்திவிட முடியும்.
மேலும், பாதுகாப்பு தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக நவீன ஸ்மார்ட் கார்டு, உறுப்பினர்களின் முக அடையாத்தைக் கொண்டு உள்ளே அனுமதிக்கும் தொழில் நுட்பம், 300 அதிநவீன சி.சி.டி.வி கேமராக்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல, மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைவரின் பயன்பாட்டுக்காக சுமார் 64 கழிவறைகள் தரைதளத்துக்குக் கீழே அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதுதவிர வெளிப்புறத்தை பொறுத்தவரையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு விசாலமான பார்க்கிங் பகுதி, சுற்றிலும் பசுமையான புல்வெளிகள், புதிய சிவப்பு கிரானைட் நடைபாதைகள், 900-க்கும் மேற்பட்ட மின் விளக்கு கம்பங்கள், பாரம்பரியத்தை வெளிப்படுப்படுத்தும் வகையில் வெள்ளை மணற்கல் தூண்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

பிரதான ராஜ பாதையின் குறுக்கே மூன்று சுரங்கப் பாதைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த பாதையின் இருபுறங்களிலும் உள்ள கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு, அதில் 16 பாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இந்த புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் ஆயுட்காலம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் எனவும், பூகம்பத்தை தாங்கும் வகையில் வலுவாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எழுந்திருக்கும் சர்ச்சைகள்:
புதிய கட்டடத்தின் மாற்றங்கள் பல்வேறு சர்ச்சைகளுக்கும் வித்திட்டிருக்கின்றன. குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் இருக்கைகள் அதிகப்படுத்தப்பட்டிருப்பதால், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை பா.ஜ.க மறுசீரமைப்பு செய்யவிருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இதனடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகள் எண்ணிக்கை பின்னடைவை சந்திக்கும் என்றும், பா.ஜ.க ஆதிக்கமுள்ள உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களின் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. அதேபோல, மாநிலங்களவைக்கு தாமரை தீம்-ல் உருவாக்கி இருப்பதும் சர்ச்சைகளுக்கு வித்திட்டிருக்கிறது.
மேலும் படிக்க சென்ட்ரல் விஸ்டா: புதிய நாடாளுமன்றக் கட்டடம் - வெளிவந்த புகைப்படங்கள் சொல்லும் சிறப்பம்சங்கள் என்ன?