இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த சூழலில் மார்ச் 2020 பிரதமரின் 'குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிதி' அல்லது Pm Cares என்ற பெயரில் இணையதளத்தை தொடங்கி, இதன் மூலம் மக்கள் நன்கொடை வழங்கலாம் என தெரிவித்திருந்தார். இது தொடர்பான இணையதளத்தில் இந்திய அரசின் முத்திரையுடன், இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணைதள வாசகமான gov.in என்ற குறிப்பும் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த இணையதளம் மூலம் மக்கள் நன்கொடை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், "பி.எம் கேர்ஸின் கையிருப்பு நிதி, செலவழிக்கப்பட்ட நிதி உள்ளிட்ட விவரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும். ஏனெனில் அதுவும் பொது அதிகாரத்திற்கு உட்பட்டது. பி.எம் கேர்ஸ் நிதி விவகாரங்கள் சுதந்திரமாக கையாளப்படுவதை உறுதி செய்ய அதை அரசியலமைப்பின்படி அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் உத்தரவிட வேண்டும்" என மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக பிரதமர் அலுவலகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், "பி.எம் கேர்ஸ் நிதி செயல்பாடுகளை மத்திய அரசோ அல்லது மாநில அரசோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டுப்படுத்தவில்லை. பி.எம் கேர்ஸ் என்பது பொதுத் தொண்டு அறக்கட்டளையாகும். இது இந்திய அரசியலமைப்பாலோ மத்திய மாநில அரசு சட்டங்களாக உருவாக்கப்படவில்லை. பி.எம் கேர்ஸ் பொது அறக்கட்டளை என்பதால், அது தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கான பொது அதிகாரத்தின் கீழ் வராது.

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், பி.எம் கேர்ஸ் நிதியில் இருந்து வழங்கப்படும் நிதி, எவ்வாறு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என்ற எந்தவித விதிமுறைகளும் இல்லை. பிற தனியார் தொண்டு நிறுவனங்களைப் போல பி.எம் கேர்ஸ் தொண்டு அமைப்புக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு வருமான வரியில் விலக்கு அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் பிரதம மந்திரியின் தேசிய நிவாரண நிதி இணையதளத்தில் பயன்படுத்துவது போல பி.எம் கேர்ஸ் செய்தி இணையதளத்தில் இந்திய அரசின் முத்திரை, இந்தியா அரசின் அடையாள gov.in பக்க முடிவுகளை பயன்படுத்துகிறது.
மேலும், இந்த தொண்டு நிறுவனம் இந்திய அரசியலமைப்பிற்கு கீழ் இல்லாததாலும், பொது சொத்து இல்லை என்பதாலும் மூன்றாம் தரப்பின் விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது" என்று தெரிவித்திருக்கிறது.
மேலும் படிக்க ``ஆர்.டி.ஐ-யின் கீழ் `PM Cares’ தகவல்களை வெளியிட முடியாது; ஏனெனில்..." - பிரதமர் அலுவலகம் பதில்