ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபேட்டியா) சார்பில் வேட்பாளர்கள் சந்திப்பு பொது மேடை நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத் தலைவர் வி.கே.ராஜமாணிக்கம் தலைமையில், பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வேட்பாளர்கள் தரப்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசு ஆகிய இருவர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஈரோடு மாநகரின் தொழில் வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த மனுவை, ஃபேட்டியா நிர்வாகிகள் வழங்கி, வணிகர்கள் தரப்பில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

அ.தி.மு.க சார்பில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், ``தி.மு.க ஆட்சியில், எந்தத் துறையும் வளர்ச்சி காணாத நிலையில், சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டண உயர்வு போன்றவற்றால் மக்கள் பெரிதும் அவதியுறுகின்றனர். முன்னாள் முதல்வர் இ.பி.எஸ் கொண்டு வந்த ரூ.1,750 கோடி மதிப்பிலான அத்திக்கடவு-அவினாசி திட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்கது.
இந்தத் திட்டம் அ.தி.மு.க ஆட்சியிலேயே 90 சதவிகிதப் பணிகள் முடிவடைந்தும், தி.மு.க வினர் இந்தத் திட்டத்தை முடிக்க ஆர்வம் காட்டவில்லை. அ.தி.மு.க ஆட்சியில்தான் ஈரோடு ரிங் ரோடு, மேம்பாலம், ஈரோடு-மேட்டுப்பாளையம், பவானி- தொப்பூர், ஈரோடு- காங்கயம் சாலை விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. மஞ்சள்தூள் மீதான ஜி.எஸ்.டி வரி நீக்கப்பட்டு விவசாயிகள் பாதுகாக்கப்பட்டனர்" என்றார்.
முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசுகையில், ``ஈரோடு மாநகரிலிருந்து திண்டல் வரையிலும் மேம்பாலம் கட்டத் திட்டமிட்டோம். ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் அதை தடுத்து நிறுத்திவிட்டனர்" என்றார்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி, ``அ.தி.மு.க ஆட்சியில் 9,500 மெகாவாட் மின் தேவைக்கு மாறாக 10,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. உபரி மின்சாரம் கர்நாடகத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், முந்தைய தி.மு.க ஆட்சியில் 18 மணி நேர மின்வெட்டு அனைத்து தரப்பு மக்களையும் பாதித்தது.

அ.தி.மு.க., ஆட்சியின்போது, மின் கட்டணம் மிகக் குறைந்த அளவு உயர்த்தப்பட்டு, அதன் இழப்பை சமாளிக்க, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மின்வாரியத்துக்கு மானியம் வழங்கினார். ஆனால் தற்போது, மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டதால், மக்கள், குறிப்பாக தொழில் துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அ.தி.மு.க ஆட்சியில், விசைத்தறியில் இலவச வேட்டி-சேலைகள் உற்பத்தி செய்வதற்கான உத்தரவு உரிய நேரத்தில் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தி.மு.க ஆட்சியின் செயல்பாடு விசைத்தறியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விசைத்தறிக்கு இலவச மின்சாரம் 750 யூனிட்டிலிருந்து 1000 யூனிட்டாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியைக்கூட தி.மு.க இதுவரை நிறைவேற்றவில்லை. சொத்து வரி உயர்வு மற்றும் வேலை இல்லாததால் ஈரோடு கிழக்குத் தொகுதியிலிருந்து 35,000 வாக்காளர்கள் வேறு பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர்.
எனவே, தி.மு.க ஆட்சியை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இல்லையெனில், தி.மு.க தனது தவறான ஆட்சியைத் தொடரும். மேலும் மக்கள்மீது சுமையை ஏற்றி, மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தும்" என்றார்.

அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசு பேசுகையில், ``ஈரோடு கிழக்குத் தொகுதியில், நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோதுதான், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தின் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றன. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றுவதற்கான நிதி பெறப்பட்டு அந்தப் பணிகள் முடிவடையும் தருவாயில் இருக்கின்றன. நீண்ட நாள் கோரிக்கையான மேம்பாலம் அமைக்கப்பட்டது, கனி மார்க்கெட் ஜவுளிச்சந்தையில் ஒருங்கிணைந்த ஜவுளிசந்தை வணிக வளாகம் கட்டியது, காளைமாடு சிலை பகுதியில் வணிக வளாகம், மின்மயானம், ஈரோடு புறநகர் ரிங்ரோடு, ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டம் என அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியிருக்கிறேன். எனது காலத்தில் தொடங்கப்பட்ட பணிகளைத்தான் தி.மு.க-வினர் திறந்து வைத்து வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஈரோடு மாநகரப் பகுதியில் புதிதாக ஏதேனும் திட்டத்தை தி.மு.க அரசு தொடங்கியிருந்தால் அதை பட்டியலிடுங்கள். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தொடர்ந்து மக்கள் பிரச்னைகளுக்காக சட்டப்பேரவையில் குரல் கொடுத்து மக்கள் பணிகளைச் செய்து முடிப்போம். எனவே எனக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களியுங்கள்" என்றார்.
சின்னம் முடிவாகாத நிலையில் தனக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிக்குமாறு, தென்னரசு கேட்டது முணுமுணுப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க கூட்டணி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.வி.ராமலிங்கம், மா.ஃபா.பாண்டியராஜன், த.மா.கா., பொதுச்செயலாளர் விடியல் சேகர், யுவராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தி.மு.க கூட்டணி சார்பில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சு.முத்துசாமி, பெரியகருப்பண், தா.மோ.அன்பரசன், செந்தில் பாலாஜி, மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், ``2021-ம் ஆண்டு தி.மு.க சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் கூறியபடி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் அளவு மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் அளவானது 750 யூனிட்டிலிருந்து தற்போது 1,000 யூனிட்டாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதே போல கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 300 யூனிட்டாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கான மானியத்தொகை தமிழக அரசின் சார்பில் மின்வாரியத்துக்குச் செலுத்தப்படும். இதே போல சமீபத்தில் உயர்த்தப்பட்ட விசைத்தறி கூடங்களுக்கான மின்கட்டண விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி ஏற்கெனவே உயர்த்தப்பட்ட மின் கட்டணமான ரூ.1.40 பைசாவிலிருந்து 70 பைசாவாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான கோப்புகளில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கையொப்பமிட்டார். ஆனால், தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற பிறகே இதற்கான அரசாணை வெளியிடப்படும்" என்றார்.

அமைச்சர் எ.வ.வேலு, ``ஈரோட்டை சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கு இணையான அடிப்படை வசதிகளுடன் உயர்த்த வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தி வருகின்றார். எங்களது ஆட்சி முடிய மூன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். திட்டங்களைக் கொண்டு வரவும், செயல்படுத்தவும் ஆளுங்கட்சியால் மட்டுமே முடியும் என்பதால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றச் செய்வதன் மூலம், மக்களுக்காக உழைத்து வரும் தமிழக முதல்வருக்கு இது உந்து சக்தியாக அமையும்" என்றார்.

அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ``ஈரோட்டின் உள்பகுதியில் உள்ள சாலைகள் பழுதடைந்து காணப்படுகின்றன. தேர்தல் முடிவடைந்ததும் முழுமையாக சீரமைத்து தரப்படும். ஈரோடு மேற்கு தொகுதியில் தார்சாலைகள் அமைக்க ரூ.77. 8 கோடி, கிழக்குத் தொகுதியில் ரூ.84.4 கோடி என மொத்தம் ரூ.165 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மண் சாலைகள் அமைக்க மேற்கு தொகுதியில் ரூ.1.48 கோடியும், கிழக்குத் தொகுதியில் 48 லட்சமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கான்கிரீட் சாலைகள் அமைக்க மேற்கு தொகுதிக்கு ரூ.13.22 கோடி, கிழக்குத் தொகுதிக்கு ரூ.13.64 கோடியும், பேவர் பிளாக், சிறுபாலம் கட்டுதல், வடிகால் வசதி என மொத்தம் ரூ.377 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறோம்" என்றார்.
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், ``நான் வெற்றி பெற்றால் தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் செயல்படுத்தித் தருவேன். தமிழக முதல்வருக்கு ஈரோடு மக்கள்மீது அதிக அக்கறை உள்ளது. வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியின் ஒத்துழைப்போடு திட்டங்கள் எளிதாக கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்படும். நான் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராக இருந்தபோது, முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, நெசவாளர்களுக்கான சென்வாட் வரி முழுமையாக நீக்கப்பட்டது. இப்போது நான் ஈரோடு மக்களுக்காகப் பணியாற்ற விரும்புகிறேன். இந்தத் தொகுதி மக்களிடம் என் மகன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்ததுடன், பல்வேறு பணிகளைச் செய்து தருவதற்காக உழைத்துக் கொண்டிருந்தார். எனவே என்னுடைய மகன் விட்டுச்சென்ற பணிகளையும், அவரது பெயரையும் காப்பாற்ற வேண்டிய கடமையும் இருப்பதால், எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும்" என்றார்.
மேலும் படிக்க `ஒன்றரை ஆண்டில் ஒன்றும் செய்யவில்லை'- தென்னரசு | `கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுவேன்'- இளங்கோவன்