ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஈரோடு, வேப்பம்பாளையத்தில் நடந்தது. கூட்டத்தில் வேட்பாளர் தென்னரசுவை அறிமுகம் செய்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார், ``ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் முடிவை தமிழகம் மட்டுமல்ல, நாடே எதிர்பார்த்திருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்நோக்கியுள்ளன. இந்தத் தேர்தல் முடிவுகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும். கடந்த 2014-ல் நடைபெற்ற ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க 74,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், பாண்டிச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெற்று நாட்டின் 3-வது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் அமர்ந்தது. அதேபோல இந்த இடைத்தேர்தலில் நாம் பெறும் வெற்றியானது வரும் 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதியிலும் நமது வெற்றியை பறைசாற்றும் வகையில் இருக்க வேண்டும். அந்த வெற்றிக்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். நம்முடைய உழைப்பின் மூலம் மக்களின் வாக்குகளை இரட்டை இலை சின்னத்திற்கே கிடைக்கச் செய்வது மட்டுமின்றி, தேர்தல் சமயத்தில் மட்டுமின்றி வாக்குகளை எண்ணி முடிக்கும் வரையிலும் விழிப்புடன் இருந்து நாம் பணியாற்ற வேண்டும்.

தி.மு.க அரசு பொறுப்பேற்று 21 மாதங்களாகி விட்டன. இதுவரை ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு துரும்பைக் கூட இந்த அரசு கிள்ளிப் போடவில்லை. எங்கு பார்த்தாலும் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, போதை பொருள் விற்பனை அதிகரிப்பு மட்டுமே இந்த ஆட்சியின் சாதனையாக இருக்கிறது. மக்களுக்காக எதையும் செய்யவில்லை.
தமிழகம் உயர வேண்டுமானால் பொருளாதாரத்தில் நாம் முன்னேறிய மாநிலமாக இருக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை வேளாண் தொழிலும், ஜவுளித் தொழிலும் முக்கியமாக உள்ளன. இந்தத் தொழில்களின் வளர்ச்சிக்கு முந்தைய அதிமுக ஆட்சியில் முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை மக்களுக்கு அளித்தோம்.
வேளாண் தொழிலுக்குத் தேவையான நீர்மேலாண்மைக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்பட்டோம். ரூ.1,652 கோடி செலவில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டது. ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு குடிமராமத்துப் பணிகள் செய்யப்பட்டது. ஜவுளித் தொழில் வளர்ச்சிக்காக கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை செய்து தந்தோம்.
பொங்கல் தினத்தன்று ஏழை, எளிய மக்களுக்காக இலவச வேட்டி-சேலைகளை உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்ததால் அவர்களின் மனம் குளிர்ந்தது.

ஆனால் தி.மு.க ஆட்சியில் இலவச வேட்டி, சேலைகளின் உற்பத்தியை சரியான நேரத்தில் தொடங்காததால் விசைத்தறித் தொழில்கள் முடங்கி, நூற்றுக்கணக்கான விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான விசைத்தறிகள் உடைக்கப்பட்டு எடைக்கு போடும் அவலம் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் வேறு தொழிலுக்குச் சென்று விட்டனர். குறிப்பிட்ட நேரத்தில் இலவச வேட்டி, சேலைகளின் உற்பத்தி பணிகளை வழங்காததால் இன்றைக்கு விசைத்தறி தொழிலே முடங்கி விட்டது.
நாங்கள் மக்களிடம் வாக்குகளைக் கேட்டு போகும் போது பெண்கள் எங்களிடம் அழுது புலம்பினர். தி.மு.க ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதை நாங்கள் பார்க்கிறோம்.
தற்போது தமிழகத்தில் ஒரு பொம்மை முதலமைச்சர் தான் ஆட்சி செய்து வருகிறார். அவரை சூப்பர் முதல்வர் என்று கூறுகிறார்கள். ஆம். அவர் சூப்பர் முதல்வராகத் தான் இருக்கிறார். எதில் தெரியுமா. கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன் ஆகியவற்றில் தான் சூப்பர் முதல்வராக இருக்கிறார். அவரை பொருத்தவரை யார் அதிகமாக கமிஷன் தருகிறாரோ அவர் தான் சிறந்த அமைச்சர் என்று கூறுவார். அப்படிப்பட்ட ஒரு அமைச்சர் இந்தத் தொகுதியில் தேர்தல் பணிபுரிந்து வருகிறார். அந்த அமைச்சருக்கு மக்கள் பணி செய்வதில் விருப்பம் இல்லை. மக்களுக்கு ஆசைகாட்டி பணம் தருவதாகக் கூறி ஒரு குடோனில் அடைத்து வைத்திருக்கிறார். அனைத்து தேர்தல் விதிமுறைகளும் மீறப்படுகின்றன. இந்த விதிமீறல்களுக்கு காவல்துறையும், அதிகாரிகளும் துணை போகின்றனர். அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். நாளை ஆட்சி மாறலாம். தற்போது மக்களுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்தக் கூட்டத்தின் மூலம் எச்சரிக்கிறேன்.
சீப்பை ஒளித்து வைத்தால் திருமணத்தை நிறுத்தி விடலாம் என்று நினைத்து வாக்காளர்களை குடோனில் அடைத்து வைத்துள்ளனர் தி.மு.கவினர். இவ்வாறு அடைத்து வைப்பதன் மூலம் எங்களது வெற்றியை தடுத்து விட முடியாது. இந்தத் தொகுதியில் 20 அமைச்சர்களும், கூட்டணிக்கட்சியினரும் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தேர்தலில் தோல்வி பெற்று விடுவோம் என்ற பயம் வந்து விட்டது. இந்த பயமே நம்முடைய வெற்றிக்கு அறிகுறியாகும்.

நீங்கள் எத்தனை ஆயிரம் பணம் கொடுத்தாலும், வாக்களிக்கச் செல்லும் போது மக்களுக்கு இரட்டை இலை சின்னம் மட்டும்தான் தெரியும். அதனால், அவர்கள் (தி.மு.கவினர்) எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்களே, வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் வாக்களிக்கும்போது மட்டும் இரட்டை இலை சின்னத்தை மறக்காதீர்கள்.
இன்று தமிழகத்தின் எல்லா துறைகளும் சீரழிந்து போக திறமையற்ற முதல்வரின் ஆட்சி தான் காரணம். ஏற்கெனவே நாங்கள் கொண்டு வந்த திட்டங்களைத் தான் இப்போது ரிப்பன் வெட்டி, அவர்கள் திறப்பு விழா செய்து கொண்டிருக்கிறார்கள்.
முதல்வரின் தந்தைக்கு நினைவு மண்டபம் கட்டியது, மதுரையில் நூலகம் கட்டுவது போன்ற ஒரு சில பணிகள் மட்டுமே தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெற்றுள்ளது. மக்கள் பிரச்னைகள் எவ்வளவோ இருக்கிறது. அதை விட்டு கடலின் நடுவே கருணாநிதிக்கு ரூ. 81 கோடி செலவில் பேனா சின்னத்தை வைக்கப் போகிறார்களாம். தாராளமாக பேனா சின்னத்தை வையுங்கள். நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதை அவரின் நினைவிடத்துக்கு முன் வையுங்கள். ரூ.2 கோடி செலவிட்டு மீதியுள்ள தொகையை மக்களுக்காக செலவிடுங்கள். நல்ல பல திட்டங்கள் நிதி இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன. அந்தத் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை செய்து முடிக்கலாம்.

எங்களது 10 ஆண்டு ஆட்சியில் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களுக்காக ரூ.484 கோடி செலவில் ஊராட்சிக் கோட்டையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை தொடக்கி வைத்தோம். இந்தத் திட்டத்தையே முடக்கி வைத்து ஈரோடு மக்கள் நல்ல குடிநீரை அருந்த முடியாமல் செய்தது தி.மு.க. அரசு தான்.
நாங்கள் பொங்கலுக்கு 21 வகையான தரமான பொருள்களை காெடுத்தோம். அவர்கள் தரமற்ற பொருள்களை கொடுத்து ஏமாற்றினர்.
ஈரோடு மாவட்டத்தில் கவுந்தப்பாடி, சித்தோடு பகுதியில் தரமான வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து வாங்கி மக்களுக்கு கொடுத்திருந்தாலே தரமான வெல்லத்தை மக்கள் பெற்றிருக்க முடியும். ஆனால், இந்தத் திட்டத்தில் கூட ஊழல் செய்தது தி.மு.க அரசு. பொங்கலுக்கு வெல்லம் வாங்கியதில் மட்டும் ரூ.500 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.81 கோடியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டும் பணி, ரூ.54 கோடியில் மேம்பாலம் கட்டியது போன்றவற்றை நாங்கள் நிறைவேற்றித் தந்தோம். காலிங்கராயன் விடுதியில் இருந்து திண்டல் வரையிலும் ரூ.350 கோடி செலவில் மேம்பாலம் கட்ட திட்டமிட்டிருந்த நிலையில் அந்தத் திட்டத்தை இந்த அரசு ரத்து செய்து விட்டது. திண்டலில் இருந்து சத்தி சாலை வரையிலும் போட வேண்டிய ரிங் ரோடு திட்டத்தையும் செய்யாமல் கிடப்பில் போட்டு விட்டது. ஈரோடு- கோபி, பவானி-தொப்பூர் சாலை விரிவாக்கப்பணிகள், ரூ.70 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விரிவாக்கம், பள்ளிபாளையம்-கருங்கல்பாளையம் பகுதியில் காவிரியின் குறுக்கே கூடுதல் பாலம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து தந்துள்ளோம்.
ஆட்சிப்பொறுப்பேற்ற இந்த 21 மாதத்தில் எந்தப் பணிகளையும் செய்யவில்லை. மக்கள் பணியாற்ற தி.மு.க அரசு மறந்து விட்டதை வாக்காளர்களுக்கு எடுத்துக்கூறி கட்சியினர் வாக்குகளை சேகரிக்க வேண்டும். தந்தை முதல்வர், மகன் உதயநிதி அமைச்சர் என குடும்ப ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இந்த குடும்ப ஆட்சிக்கு இந்தத் தேர்தல் மூலம் முடிவு கட்ட வேண்டும்.
ரெட் ஜெயின்ட் என்ற திரைப்பட நிறுவனம், அடிமாட்டு விலைக்கு திரைப்படங்களை வாங்கி நல்ல லாபம் சம்பாதிப்பதன் மூலம் திரைத் தாெழிலையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 120 திரைப்படங்கள் இன்னும் திரையிட முடியாமல் காத்திருக்கிறது. உதயநிதியின் அடாவடியால் தான் இந்த திரைப்படங்களை வெளியிட முடியவில்லை.

மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, விலைவாசி உயர்வு என மக்கள் தலையில் பெரும்சுமையை ஏற்றி விட்டார்கள். இவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற 21 மாதங்களில் ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கியுள்ளனர். ஆட்சிப் பாெறுப்பேற்ற பின் 560 வாக்குறுதிகளில் 85 சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாக பச்சை பொய் கூறுகிறார்கள். குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வீதம் உரிமைத் தொகை தருவதாகக் கூறி இதுவரை தரவில்லை. அதை 21 மாதங்களுக்கும் வழங்குமாறு கேளுங்கள்.
மாணவர்களுக்கு மடிக்கணினி, தாலிக்கு தங்கம் போன்ற திட்டங்களையும் நிறுத்தி விட்டனர். நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறியவர்களால் ஏன் ரத்து செய்ய முடியவில்லை. பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை கைப்பற்றிய கட்சி தான் தி.மு.க. 41 % மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் தான் படிக்கின்றனர். இந்த மாணவர்களில் வெறும் 9 பேர் தான் மருத்துவக் கல்வியில் சேரும் நிலை இருந்தது. 7.5 % அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அ.தி.மு.க ஆட்சியில் இடஒதுக்கீடு கொடுத்ததால் இந்த ஆண்டில் மட்டும் 540 மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளனர். அவர்கள் அரசு செலவில் மருத்துவக் கல்வி பயில்வதற்கான நடவடிக்கையையும் அ.தி.மு.க. அரசுதான் செய்தது. இவ்வாறு எல்லா வகையிலும் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு எங்கள் அரசு செயல்பட்டது.
எனவே, இந்த தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுக்கு வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்வதன் மூலம் தி.மு.க அரசுக்கு எச்சரிக்கை மணி அடிப்பதாக இருக்க வேண்டும். இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை உணர்த்தும் வகையில் தென்னரசுவின் வெற்றி இருக்க வேண்டும்” என்று பேசினார்.
மேலும் படிக்க ``சூப்பர் முதல்வர் ஸ்டாலின், கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷனில்...” - கொதித்த எடப்பாடி பழனிசாமி