ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த முருகையன் என்பவரின் மகன் தினேஷ் குமார். இவர், கடந்த 2019-ம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தகுதி தேர்வை எழுதி இருந்தார். தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த நாளே, சென்னை ராயப்பேட்டை, லாய்ட்ஸ் காலனியைச் சேர்ந்த சபரி (36), போரூர் டி.வி.ஏ கோயில் தெருவைச் சேர்ந்த ஷாம் கிதியோன் (38) ஆகியோர் முருகையனை சந்தித்து, `தினேஷ் குமார் நீட் தேர்வில் 116 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். அவருக்கு மருத்துவப் படிப்பில் சேர ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருகிறோம்” என கூறி வாக்குறுதி அளித்துள்ளனர்.
இருவரும் தனது தூரத்து உறவினர்கள் என்பதால் அவர்களின் பின்னணி என்ன என விசாரிக்காமல், முருகையன் சில தினங்களில், இரு தடவை ரூ.15 லட்சம் என 30 லட்சமும் மறுமுறை ரூ.10 லட்சம் என பணத்தை தவணை முறையில் 40 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
முருகையனிடம் இருந்து 40 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்ட இருவரும், அவரின் மகனுக்கு கல்லூரியில் இடம் வாங்கித் தராமலும், பணத்தை திரும்பக் கொடுக்காமலும் ஏமாற்றியுள்ளனர். உறவினர்கள் என்பதால் எப்படியும் பணத்தை வாங்கி விடலாம் என கடந்த 4 ஆண்டுகளாக முயற்சி செய்த முருகையனுக்கு ஏமாற்றமே எஞ்சியது. இதைத்தொடர்ந்து முருகையன் கடந்த மார்ச் 3-ம் தேதி ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.
காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், புகாரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் முதல் குற்றவாளியான(A) சபரியை லாய்ட்ஸ் காலனி, அரசு குடியிருப்பு பகுதியிலும், , ஷாம் கிதியோனை ஆவடி பேருந்து நிறுத்தத்தில் வைத்தும் கைது செய்த போலீஸார்பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க `ஓமந்தூரார் கல்லூரியில் இடம் வாங்கி தருகிறோம்’ - பறிபோன ரூ.40 லட்சம்; உறவினர்களே ஏமாற்றிய சோகம்