உத்தரபிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை (15-4-2023) அன்று பிரயாக்ராஜில் அதீக் அகமது மற்றும் அவரின் சகோதரர் அஷ்ரப் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்த சமயத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் அவர்கள் இருவரையும் கொலைச் செய்தது. இதையடுத்து அந்த குற்றவாளிகள் மூவரும் அஸ்ஸாமை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது. அவர்கள் 14 நாள்கள் போலீஸ் காவலில் விசாரணைக்காக வைக்கப்பட்டிருக்கின்றனர்.
முன்னதாக கேங்ஸ்டராக வலம் வந்த அதீக் அகமது, பிற்காலத்தில் அரசியல்வாதியானவர். இந்நிலையில் அதீக் மற்றும் அவரின் சகோதரரின் கொலைக்கு பின், 2017 முதல் உத்தர பிரதேச மாநிலத்தில் இதுவரை நடந்தேறிய 183 என்கவுன்டர்கள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் விஷால் திவாரி, இதை பொது நல வழக்காக தாக்கல் செய்துள்ளார். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார். அதோடு அதீக் மற்றும் அவரது சகோதரரின் கொலை குறித்து விசாரணை நடத்தவும் அவர் கோரியுள்ளார்.
உத்தரபிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற 2017 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மாநிலத்தில் 10,900 க்கும் மேற்பட்ட அதிதீவிர போலீஸ் நடவடிக்கைகள் நடந்துள்ளதாக உத்தர பிரதேச காவல்துறையின் தரவுகள் கூறுகிறது. இந்த நடவடிக்கைகளில், 23,300 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகவும், 5,046 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் காயமடைந்த காவலர்களின் எண்ணிக்கை 1,443 . அதோடு 13 காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மார்ச் 2017 முதல் என்கவுன்டர்களில் கொல்லப்பட்ட 13 காவலர்களில், எட்டு பேர் கான்பூரின் குறுகிய பாதை ஒன்றில் பதுங்கி இருந்த விகாஸ் துபேயின் கும்பலால் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க உ.பி: `அந்த 183 என்கவுன்டர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும்!’ - உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்