மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கரூர் சுங்ககேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்துகொண்டார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "பா.ஜ.க ஆட்சி எல்லை தாண்டி போகிற ஆட்சியாக இருக்கிறது. முழுமையாக நாடாளுமன்றத்தை நடத்த முடியாத ஆட்சியாக பா.ஜ.க ஆட்சி உள்ளது. அதானி குழுமம் முறைகேடுகள் நடந்ததா, இல்லையா என்பதை விசாரணை குழு நடத்தட்டும், அதுவரை நாடாளுமன்றத்தில் சமர்பித்த பட்ஜெட்டை கூட விவாதிக்காமல் இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் கூட விசாரணைக் குழு அமைக்க முன்வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் அதை விவாதிக்க முடியாத நிலை உள்ளது. சொத்து குவிப்பிற்கும், மோடிக்கும் தொடர்பு உள்ளது. அதானியும், மோடியும் கூட்டு களவானிகள் தான். உச்ச நீதிமன்றம் தலையிட்டு விசாரணை குழு அமைகிறது. ஆனால், ஒன்றிய அரசு விசாரணை குழுவைப் பார்த்து அஞ்சுகிறது. குறிப்பாக, பிரதமர் மோடி அரசு, அவசரகதியில் ராகுல் காந்தியின், பதவி பறித்துள்ளது. வீட்டை காலி செய்ய நோட்டீஸ் வழங்கி இருக்கிறார்கள். 30 நாள் நீதிமன்றம் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் ஏன் அவசரமாக ராகுல் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது?.
டெக்ஸ்டைல் தொழில் நகரமான கரூரில் குறைவான ஆர்டரே கிடைத்துள்ளதால், தொழில் முடங்கி கிடக்கிறது. சர்வாதிகார போக்கை நோக்கி மத்திய ஆட்சி சென்று கொண்டிருக்கிறது. பட்ஜெட்டில் நல்ல திட்டங்களை மாநில அரசு கொண்டு வந்துள்ளது. அதனை, எங்கள் கட்சி வரவேற்றுள்ளது. நல்ல திட்டங்களை வரவேற்கிறோம். அதே நேரத்தில் நிதி அமைச்சர் சொல்லும் கருத்து அவரது சொந்த கருத்தா அல்லது அரசின் கருத்தா என்பது தெரியவில்லை. அந்த மாதிரியான பொருளாதார கொள்கைகளை அமல்படுத்தினால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். சிறு, குறு தொழில்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை செயல்படுத்த வேண்டும். 152 அரசாணையின் படி, அவுட் சோர்சிங் முறையை மாற்ற வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு திட்டத்தில் நல்ல முடிவை எடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியயத்தை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு பட்ஜெட்டில் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் பல்வேறு விளக்கங்களை அளித்து வருகிறார்.
பள்ளிக்கல்வித்துறையில் தமிழக மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் திட்டம் நிறுத்தப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளது பற்றி கேட்கிறீர்கள். அ.தி.மு.க அரசு திட்டங்கள் நிறுத்தப்படவில்லை, லேப்டாப் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவோம் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. எந்த ஒரு நிவாரண திட்டமும் அனைவருக்கும் கொடுக்க தேவையில்லை. யாருக்கு தேவை என்பதை உணர்ந்து அவர்களுக்கு கொடுப்பது தான் நல்லது.
வடமாநில தொழிலாளர்கள் இல்லை என்றால், தமிழகத்தில் தொழில்கள் நடத்த முடியாது. தமிழ்நாட்டின் தொழில் விஸ்தரிப்பால் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். தமிழகத்தை சார்ந்தவர்கள் வெளி மாநிலங்களில் வேலை பார்த்து இருக்கிறார்கள். ஒன்றிய அரசு, மாநில அரசு அரசு வேலைவாய்ப்பில், தமிழ்நாடு இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்" என்றார்.
மேலும் படிக்க "திமுக, தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை செயல்படுத்த வேண்டும்!" - சொல்கிறார் கே.பாலகிருஷ்ணன்