பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று (ஏப்.24) கேரள மாநிலம் வருகிறார். வந்தே பாரத் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்களை தொடங்கி வைப்பது, கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என இரண்டு நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. சீரோ மலபார் சபை ஆர்ச் பிஷப் கர்த்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி, மலங்கரை கத்தோலிக்க சபை கர்த்தினால் பசேலியோஸ் மார் கிலிமீஸ், ஆர்த்தோடெக்ஸ் சபையின் கர்த்தினால் மார்த்தோமா மேத்யூஸ் உள்ளிட்ட 8 சபைகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து உரையாடுகிறார். கொச்சி தாஜ் விவண்டா ஹோட்டலில் வைத்து பிஷப்புகள் சந்திப்பு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும் ஜார்ஜ் ஆலஞ்சேரி பிரதமர் நரேந்திர மோடியை சமீபத்தில் புகழ்ந்து பேசியவராவார். பின்னர் இன்று மாலை கொச்சியில் நடக்கும் பா.ஜ.க பேரணியில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். நாளை திருவனந்தபுரத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு திருவனந்தபுரம் ரயில் நிலையம் மட்டுமல்லாது, ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி அமைந்துள்ள பஸ் ஸ்டாண்டிலும் போக்குவரத்து மாற்றப்படுள்ளது. இந்த நிலையில் பிரதமரின் பாதுகாப்புகளும், அவருக்கான ஏற்பாடுகளும் குறித்த போலீஸ் அதிகாரிகளின் திட்டங்கள் தகவல்கள் வெளியானது சர்ச்சையை கிளப்பியது. அதுமட்டுமல்லாது பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.
கேரளத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை கொலைச் செய்ய போவதாக ஒரு பேப்பரில் கையெழுத்தால் எழுதிய மிரட்டல் கடிதம் பா.ஜ.க அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதுகுறித்து மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் டி.ஜி.பி-யிடம் புகார் அளித்தார். அந்த கடிதத்தில் ஜானி என்பவரின் பெயர் மற்றும் செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தனக்கும் அந்த கடிதத்துக்கும் சம்பந்தம் இல்லை என ஜானி தெரிவித்திருந்தார்.

அதே சமயம் ஜானியை பழிவாங்கும் நோக்கத்தில் கொச்சி கத்ருகடவு பகுதியைச் சேர்ந்த சேவியர் என்பவர் அந்த கடிதத்தை அனுப்பியது தெரியவந்தது. நண்பர்களான இருவருக்கும் பண விவகாரத்தில் கடந்த சில காலமாக மோதலில் இருந்து வந்ததும் தெரிய வந்தது. அந்த கையெழுத்தை ஒத்து பார்த்ததில் அந்த கடித்தில் இருப்பது சேவியரின் கையெழுத்து என தெரியவந்தது. இதையடுத்து சேவியர் கைது செய்யப்பட்டுள்ளார்.!
மேலும் படிக்க கேரளாவுக்கு வரும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் - முன்னாள் நண்பரை சிக்கவைக்க முயன்றவர் கைது!