Doctor Vikatan: என் பெற்றோருக்கு 70 ப்ளஸ் வயது. இருவரும் தனியே வசிக்கிறார்கள். கொரோனாவுக்கான 3 டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள். இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் அவர்களுக்கு பயம் ஆரம்பித்துவிட்டது. இன்னொரு டோஸ் போட வேண்டியிருக்குமா? தடுப்பூசிகள் போட்டவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் செய்திகளைப் பார்த்து பயந்திருக்கிறார்கள். உங்கள் அட்வைஸ் என்ன?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்

கடந்த சில தினங்களாக சாதாரண சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் உள்பட வேறு பாதிப்புகளோடு வரும் மக்களைப் பரிசோதிக்கும்போது அவர்களுக்கு கொரோனா தொற்றும் இருப்பதைப் பார்க்கிறோம். இப்படி கொரோனா பாசிட்டிவ் ஆகிறவர்கள் குழந்தைகள் முதல், வயதானவர்கள் வரை எல்லா வயதிலும் இருக்கிறார்கள். ஆனால் இவர்களில் யாரும் தீவிர பாதிப்புடன் வருவதில்லை.
ஒரு டோஸ் தடுப்பூசிகூட போட்டுக்கொள்ளாதவர்களும், இணை நோய்களின் பாதிப்பு அதிகமுள்ளவர்களும்தான் அட்மிட் செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். மற்றபடி மூன்று டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்களிடம் இந்த பாதிப்பு பெரிதாக இல்லை என்பதுதான் உண்மை.
இணைநோய்கள் உள்ளவர்கள், வயதானவர்கள் என 'ஹை ரிஸ்க்' பிரிவில் உள்ளவர்கள், மூன்று டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டிருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு மீண்டும் இந்த பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு குறையலாம்.
ஆனால் அதற்காக அவர்கள் 100 சதவிகிதம் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. வயதானவர்களில் பெரும்பாலானவர்கள் வேறு பிரச்னைகளுடன் வரும்போது டெஸ்ட்டில் கொரோனாவும் இருப்பதைக் கண்டுபிடிக்கிறோம். அவர்களும் நிமோனியா பாதிப்பு அளவுக்குத் தீவிர நிலையில் வருவதில்லை. இப்போதைக்கு நமக்கு நான்காவது டோஸ் தடுப்பூசி தேவைப்படாது என்றே தெரிகிறது.

தடுப்பூசிகளே போட்டுக்கொள்ளாமல் இருப்பதுதான் அதிக ஆபத்தானது. மற்றபடி தடுப்பூசிக்கும் ஹார்ட் அட்டாக் பாதிப்புக்கும் தொடர்பில்லை. உங்கள் பெற்றோர் மூன்று டோஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் கவலைப்படத் தேவையில்லை. வழக்கமான கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினாலே பாதுகாப்பாக இருக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: அதிகரிக்கும் கொரோனா தொற்று.... நான்காவது டோஸ் தடுப்பூசி தேவைப்படுமா?