
மறுவாய்ப்பின் முக்கியத்துவம் அறிந்த முதிர்ச்சியானதொரு ஆட்டக்காரனின் வார்த்தைகள் இவை. `இனி அவர் அவ்வளவுதான்' என யாரையும் ஒதுக்கிவைத்துவிட முடியாது என்பதையே தன் ஆட்டத்தின் மூலம் மீண்டும் எடுத்துரைத்து இருக்கிறார் `ஜின்க்ஸ்' ரஹானே. "அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்" என்பதாக தன் சொந்த மண்ணில் மும்பைக்காரர் ரஹானேவின் சாகசங்கள் இருந்தன. அவரின் கம்பேக்கைத் தாண்டி, இந்த மும்பை - சென்னை ஆட்டத்தில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் அரங்கேறியுள்ளன. அவை எல்லாவற்றையும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
ஒருவேளை ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் இதேபோன்று படுதோல்விகளைச் சந்தித்து வெளியேறினால், அவர்கள் தோற்றது களத்தில் அல்ல, ஆக்ஷன் டேபிளிலேயே முடிவு நிர்ணயிக்கப்பட்டு விட்டது என்ற கூற்றை வேறு யாருமல்ல, மும்பை ரசிகர்களே அடித்துச் சொல்லக்கூடும். பல கோடிகளில் சம்பளம் பெறும் வீரர்களை 'அவெஞ்சர்ஸ் அசெம்பிள்' கணக்காகச் சேர்த்தால் மட்டுமே அது ஸ்குவாடு ஆகிவிடாது, பிளேயிங் லெவன் ஆகிவிடாது என்பதற்குப் பெரும் உதாரணம், இந்த ஆண்டின் மும்பை அணி. ஆனால், இந்தச் சிக்கலுக்கான ஆரம்பப்புள்ளி மெகா ஆக்ஷனிலேயே நடந்தேறிவிட்டது என்பதுதான் உண்மை.

டி20 போன்ற பரபர பார்மேட் ஆட்டத்தில் மூச்சுவிடுவதற்குக்கூட ஒரு தனி `ஸ்ட்ராட்டஜி' நிச்சயம் வேண்டும். ஆனால், அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்ய, எந்தவித முன் திட்டமிடலும் இல்லாமல்தான் மும்பை நிர்வாகம் பஸ் ஏறியது எனலாம். அதனால் உருவான சிக்கல்தான் நேற்று வான்கடே வரை எதிரொலித்திருக்கிறது.
இந்தப் பக்கம் மஞ்சள் படையில் பிராவோ என்ற தூண் இல்லை, அந்தப் பக்கம் நீலப் படையில் பொல்லார்ட் என்ற மண்டபமே இல்லை. கிரிக்கெட் பிரெடிக்ஷன் போன்ற விளையாட்டுகளை ஆடும் சாதாரண கிரிக்கெட் ரசிகனுக்குக்கூட மும்பையில் பிளேயிங் லெவனே கவலைக்கிடமாக உள்ளது என்பதை அறிந்திருப்பான். ஏற்கெனவே நட்சத்திர பௌலர் பும்ரா லீவ் லெட்டர் கொடுத்திருக்க, எதற்கும் இருக்கட்டும் என ஜோஃப்ரா ஆர்ச்சரும் சிக் லீவ் எடுத்திருந்தார்.
இந்தப் பக்கம் சென்னையில், ஸ்டோக்ஸுக்குக் காயம் என்ற தகவலும், மொயின் அலிக்கு உடம்பு சரியில்லை என்ற தகவலும் சென்னை ரசிகனை ஆட்டம் காணச் செய்தது. இருந்தும் பிரிடோரியஸ், ரஹானே, சிசண்டா மகலா எனப் பிளேயிங் லெவனில் புது ரத்தம் பாய்ச்சப்பட்டிருந்தது. டாஸை வென்ற தோனி பௌலிங் தேர்வு செய்தார். வான்கடேவின் தன்மைக்கு இது ஒரு ஹைஸ்கோரிங் மேட்ச் என்றுதான் பட்சி சொன்னது. பட், மும்பை ஹேட் அதர் ஐடியாஸ்!

ஃபார்ம் அவுட்டிலிருக்கும் ரோஹித் சர்மாவும், இளங்கன்று இஷான் கிஷனும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். 'ஃபார்ம் என்பது ஒரு மனநிலை மட்டுமே. அதை உடைத்தால் போதும்' என்ற யதார்த்தத்தை அறிந்தவராக ரோஹித் தன் அதிரடி ஹிட்மேன் அவதாரத்தை வெளியே கொண்டு வர முயற்சிகள் எடுத்தார். தீபக் சஹார் வீசிய முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகள், தேஷ்பாண்டே ஓவரில் ஒரு பவுண்டரி என்று நம்பிக்கையுடனே தொடங்கினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகலாவின் ஓவரில் இஷான் 3 பவுண்டரிகள் அடித்தார். அடுத்த தேஷ்பாண்டே ஓவரை சிக்ஸருடன் தொடங்கி, நீல நிற ஜெர்ஸிக்களுக்கு உயிர் கொடுத்தார் ரோஹித். ஆனால், அதே ஓவரின் கடைசி பந்தில் ஸ்டம்பைப் பறிகொடுத்து அதிர்ச்சியளித்தார்.
பல கோடிகள் கொட்டி எடுக்கப்பட்ட கேமரூன் க்ரீனும், இஷானும் களத்தில். ஆனால், பொறுமை காத்து பார்ட்னர்ஷிப் பில்ட் செய்யாமல், பவர்ப்ளே முடிந்த கையோடு பந்து வீச வந்த ஜடேஜாவை எப்படி வெறுங்கையுடன் அனுப்புவது என்பதாக இஷான் தன் விக்கெட்டைத் தியாகம் செய்தார். 7வது ஓவரில் சான்ட்னர் வீசிய பந்தை சூர்யகுமார் யாதவ் ஸ்வீப் செய்ய முயல, பந்து தோனியின் க்ளவுசில் தஞ்சம் புகுந்தது. காட் பிஹைன்ட்டுக்காக அப்பீல் செய்ய, அம்பயர் நாட் அவுட் கொடுக்க, 'Dhoni Review System' 'DRS' கேட்கப்பட்டது. எதிர்பார்த்ததுபோலவே சூர்யாவின் கிளவுஸில் பந்து உரசியிருந்தது. நீல ஜெர்ஸிக்கள் நிரம்பிய, மும்பை ரசிகர்களுக்கு எனத் தனியாக ஒதுக்கப்பட்ட கேலரியில் மயான அமைதி. சூர்யா அவுட்!

அடுத்த ஓவரிலேயே க்ரீன் விக்கெட்டும் காலி. `பந்தை அவர் பிடிக்கவில்லை. பந்துதான் அவரைப் பிடித்தது' என்பதாக ஜடேஜாவே பந்து வீசி, அவரே கேட்சையும் பிடித்தார். அதி வேகத்தில் வந்த பந்துக்கு எதிராகத் தயக்கமின்றி துரிதமாகச் செயல்பட்டு கையைக் கொண்டு சென்று அதை கேட்ச்சாக மாற்றினார் ஜட்டு. `எனக்கும் ஒண்ணு வேணும்' என மிட்டாய்க்கு அடம்பிடிக்கும் குழந்தைபோல சான்ட்னர் அடுத்த ஓவரிலேயே அர்ஷத் கானை எல்.பி.டபுள்யூ மூலம் வெளியேற்றினார். பாப்பம்பட்டி அணி கணக்காக மும்பையின் ஸ்கோர், 9.1 ஓவரில் 76/5 என்று பரிதாபமாக இருந்தது.
சற்று நிதானமாகக் காய்களை நகர்த்திய திலக் வர்மா, ஜடேஜா வீசிய 12வது ஓவரில் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார். 'ஒளி வந்துவிட்டது' என மும்பை ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார, அடுத்த பந்திலேயே அவரது விக்கெட்டை எல்.பி.டபுள்யூ முறையில் தூக்கினார் ஜட்டு. மீண்டும் மஞ்சள் ஜெர்ஸிக்குப் பின்னால் பதுங்கியது நீல நிற ரசிகர் படை. அதன் பிறகு 'பொறுமையே பெருமை' மோடில்தான் கடைசிவரை பயணித்தது மும்பை. 16வது ஓவரில் மகலா, ஸ்டப்ஸ்ஸை அவுட்டாக்கி தனது முதல் ஐ.பி.எல் விக்கெட்டைப் பதிவு செய்தார். இந்தப் போட்டியில் அவர் எக்கனாமிக்கலாக வீசவில்லை என்றாலும் இது அவருக்கு ஓர் ஆறுதல்.
அடுத்த தேஷ்பாண்டே ஓவரில் 6, 4, 6 என டிம் டேவிட் வாண வேடிக்கை காட்டி ஓய்ந்துபோக, 131/8 என முந்தைய நிலையைவிட ஒரு கௌரவமான நிலைக்கு மும்பை வந்திருந்தது. கடைசி ஓவரில் ஹ்ரித்திக் ஷோகீன் 3 பவுண்டரிகளை அடிக்க, சென்னை அணிக்கு 158 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை அணி. சென்னை சார்பில், ஜடேஜா 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். வான்கடே பிட்ச்சின் நேற்றைய தன்மைக்கு 200 கூட சாத்தியம் என்ற நிலையில், 20 ரன்கள் குறைவான ஸ்கோர் இது என்பது தெளிவாகத் தெரிந்தது. சென்னை இதை 17 ஓவரிலேயே வென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்றெல்லாம் ஆரூடங்கள் சொல்லப்பட்டன.

ஆனால், ஆரம்பத்திலேயே சென்னை ரசிகர்களை பி.பி மாத்திரையைத் தேட வைத்தது சிஎஸ்கே. பெஹரண்டார்ஃப் வீசிய முதல் ஓவரிலேயே கான்வே அவுட். சிஎஸ்கே-வுக்காக முதன் முறையாகக் களமிறங்கினார் ரஹானே. ருத்துராஜ் எதிரில் இருக்க, ரஹானே ஆங்கரிங் இன்னிங்ஸ் ஆடினால் போதும் ருத்து அதிரடி காட்டுவார் என்றே பலரும் கணக்குப் போட்டனர். ஆனால், நடந்த சம்பவம் அதற்கு நேர் எதிர்! ரஹானே ஆட்டத்தின் சாரதியாக முன்னெடுத்துச் செல்ல, அமைதியாக அவரைப் பின்தொடர்ந்தார் ருத்து. 'அதிரடிக்காரனாக' அஜிங்க்யா ரஹானே ஒரு மகத்தான இன்னிங்ஸை ஆடினார். அர்ஷத் கான் வீசிய 3வது ஓவரில் 6, 4, 4, 4, 4 என மெர்சல் காட்டினார். சுவாரஸ்யம் என்னவென்றால் எதுவுமே ஸ்லாக் இல்லை, அனைத்துமே துல்லியமான கிளாசிக் டெக்ஸ்ட்புக் ஷாட்டுகள். இந்த வாய்ப்புக்காக அவர் எந்தளவு தயாராகி வந்திருக்கிறார் என்பதற்கான சான்று இது.
8வது ஓவரிலேயே அவர் வெளியேறியிருந்தாலும் மொத்தமாக ஆட்டத்தை சென்னை பக்கம் திருப்பிவிட்டிருந்தார். 27 பந்துகளில் 61 ரன்கள், அதில் 7 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடக்கம். மொத்த பிரஷரையும் ரஹானே துடைத்து எடுத்துக்கொண்டு போயிருக்க, ஷிவம் துபேவும், ருத்துராஜும் பொறுமையாக ஸ்கோரை உயர்த்தினர்.
அவ்வப்போது மட்டும் சில பவுண்டரிகள் எட்டிப்பார்க்க, ஒருநாள் போட்டி பார்ட்னர்ஷிப் கணக்காக இது அமைந்தது. 28 ரன்களில் துபே வெளியேற, ராயுடுவும் கெய்க்வாட்டும் கடைசிவரை நின்று வெற்றியை உறுதி செய்தனர். ருத்துராஜ் 40 ரன்களையும், ராயுடு 16 ரன்களையும் எடுத்திருந்தனர். தீபக் சஹாருக்கு மாற்றாக இம்பேக்ட் பிளேயராக வந்த ராயுடு, தன் தேர்வை நியாயப்படுத்தியிருந்தார். மும்பையின் இம்பேக்ட் பிளேயராக வந்த கார்த்திகேயா ஒரு விக்கெட்டை வீழ்த்தி 4 ஓவரில் 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார்.

ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டாலும் மக்களின் ஆட்டநாயகன் ரஹானே என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆக, மதுரையில் வைத்தே முத்துப்பாண்டியை அடித்த கணக்காக, மும்பை அணியின் கோட்டையான வான்கடேயிலேயே சம்பவம் செய்திருக்கிறது சென்னை. இதன்மூலம் 3 போட்டிகளில் இரண்டை வென்று டாப் 4-ல் துண்டைப் போட்டிருக்கிறது. இன்னும் பல போட்டிகள் இருப்பதால் இந்தக் காட்சி எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
மறுபுறம், 8வது இடத்தில் தவிக்கும் மும்பை, இனி வெற்றிக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை சீரியஸாகச் சிந்திக்கும் கட்டத்துக்கு வந்துவிட்டது எனலாம். சாம்பியன்கள், வரலாறு போன்ற பழங்கதைகளை விடுத்து நிகழ்காலச் சிக்கல்களை அவர்கள் சரி செய்தால் மட்டுமே அது சாத்தியம்!
மேலும் படிக்க MI vs CSK: டாப் 4-ல் சென்னை; வரலாறு, தரவுகள் தாண்டி, தன் நிகழ்காலப் பிரச்னைகளைக் கவனிக்குமா மும்பை?