சென்னையைச் சேர்ந்த இளம்பெண் சரிதா(27, பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமாகி விவாகரத்தானவர். இவர் திருச்சியில் தங்கியிருந்து நண்பர்களுடன் சேர்ந்து போட்டித் தேர்வெழுதும் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சரிதா, `‘திருச்சி காந்தி மார்கெட் இன்ஸ்பெக்டர் சுகுமார் எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து தொந்தரவு செய்து வருகிறார். இதனால் கடுமையான மன வேதனையில் இருக்கிறேன்’ என கலங்கியபடி புகார் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து கொடுத்துள்ள புகார் மனுவில், ``திருவண்ணாமலையைச் சேர்ந்த என்னுடைய உறவினரான ஆண்டனி என்பவர், கடந்த மாதம் திருச்சியில் தேர்வு ஒன்றினை எழுதுவதற்காக என்னுடைய வீட்டிற்கு வந்தார். அப்போது, கூல்ட்ரிங்க்ஸில் மயக்க மருந்தினைக் கலந்து கொடுத்து, என்னை ஆபாசமாக படம் எடுத்ததோடு, அதனை வைத்து அவருடன் உடலுறவு வைத்துக்கொள்ளுமாறு மிரட்டினார். இதுகுறித்து கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நான் கொடுத்த புகாரின் பேரில், ஆண்டனி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆனால், இந்த விவகாரம் சம்பந்தமாக காவல் நிலையத்திற்குச் சென்றுவந்த என்னிடம், உதவி செய்வதாகச் சொல்லி காந்தி மார்கெட் இன்ஸ்பெக்டர் சுகுமார் என்னுடைய செல்போன் நம்பரை கேட்டு வாங்கினார். அதன்பிறகு வாட்ஸ்அப்பில் ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது, செக்ஸ் வீடியோக்களை அனுப்புவது, வீடியோ காலில் நிர்வாணமான வருவது என தொடர்ச்சியாக செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். அதுமட்டுமல்லாமல், ‘என்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் உன்னை ஊரைவிட்டே அடித்து துரத்திவிடுவேன். நீ பாலியல் தொழில் செய்கிறாய் என உன்னை தூக்கி உள்ளே வைத்துவிடுவேன்’ என மிரட்டினார்.

மேலும், ‘சுகுமார் சாருக்கு அனுசரித்துப் போ, நீ மகாராணி போல் வாழலாம்’ என காளிமுத்து, லதா ஆகிய போலீஸார் மூலம் எனக்கு கடும் தொந்தரவுகளைக் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சுகுமாரின் இந்த செக்ஸ் டார்ச்சர் குறித்து தமிழக காவல்துறை மற்றும் திருச்சி மாநகர காவல்துறை ஆணையருக்கு ஏப்ரல் 27-ம் தேதி ஆன்லைனில் புகாரளித்தேன். அதையடுத்து கமிஷனர் அலுவலகம், ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் அலுவலகம் என பல இடங்களில் என்னை அழைத்து விசாரணை செய்தனர். அதன்தொடர்ச்சியாக கடந்த மே 24-ம் தேதி காந்தி மார்கெட் பகுதியிலுள்ள துணை ஆணையர் அலுவலகத்திற்குச் சென்றேன். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் சுகுமார், சப் இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் என்னை அடித்து மானபங்கப்படுத்தி, என்னுடைய செல்போனைப் பிடுங்கி அதிலுள்ள தகவல்களையெல்லாம் அழித்துவிட்டனர்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
புகாரளித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சரிதா, “ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்கப் போன என்னுடைய செல்போன் நம்பரை இன்ஸ்பெக்டர் சுகுமார் வாங்கி, வாட்ஸ்அப்பில் அசிங்க அசிங்கமா மெசேஜ் அனுப்புனாரு. என்னை விட்ருங்கன்னு எவ்வளவோ சொல்லியும் அவர் கேக்கலை. தொடர்ந்து போலீஸார் மூலமாக என்னை அவர் ஆசைக்கு இணங்கச் சொல்லி தொந்தரவு கொடுத்துக்கிட்டே இருந்தாரு. இதுசம்பந்தமாக புகார் கொடுக்கப் போனா, ‘என் மேலயே புகார் கொடுக்கப் போறீயா!’ன்னு, இன்ஸ்பெக்டர் சுகுமார் என்னை அசிங்க அசிங்கமாக கெட்ட வார்த்தையிலயே பேசுனாரு.

போலீஸ் ஸ்டேஷன்ல வச்சியே இன்ஸ்பெக்டர் சுகுமார் என்னை அடிச்சாரு. நான் வச்சிருந்த செல்போனை பிடுங்குறதுக்காக, ஸ்டேஷன்லயே என்னுடைய புடவையை உருவி அசிங்கப்படுத்துனாங்க. இதை ரெண்டு போலீஸ் வீடியோ வேற எடுத்தாங்க. ஸ்டேஷன்லயே இப்படியெல்லாம் நடந்தா நாங்க எங்க சார் போவோம். இதெல்லாம் சொன்னா என்னை பைத்தியம்னு சொல்றாங்க. இதுக்குப் பிறகாவது இன்ஸ்பெக்டர் சுகுமார் மேல கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பாங்கன்னு நான் நம்புறேன்” எனக் கலங்கினார்.
இந்தப் புகார் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சுகுமாரிடம் விளக்கம் பெற அவரைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். எனினும் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை. பெண்ணின் புகார் தொடர்பாக அவர் விளக்கம் கொடுக்கும் பட்சத்தில், அதனை உரிய பரிசீலனைக்குப் பின் பதிவிட தயாராக இருக்கிறோம்.!
மேலும் படிக்க திருச்சி: `வாட்ஸ்அப்பில் செக்ஸ் டார்ச்சர்; ஆசைக்கு இணைங்க மிரட்டல்’ - இன்ஸ்பெக்டர் மீது பெண் புகார்