கோட்டைகள், கொத்தளங்கள், அரண்மனைகள், குகை ஓவியங்கள், ஆதி மனிதர்கள் வசிப்பிடங்கள், வரலாற்று நினைவுச்சின்னங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்களை ஏராளமாகக்கொண்ட, கலாசார, பாரம்பர்ய மாவட்டமாகத் திகழ்கிறது புதுக்கோட்டை. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல கிராமங்கள் இந்த மாவட்டத்தில் இப்போதும் இருக்கின்றன என்பது இன்னும் சிறப்பு. இத்தகைய பெருமைகளைக்கொண்ட மாவட்டத்தில் ஆவூர் தேவாலயம், திருமயம் கோட்டை, அறந்தாங்கி கோட்டை, அதனகோட்டை சித்தன்ன வாசல் குகைக்கோயில், குடுமியான்மலை கோயில், திருக்கோகர்ணம் கோயில், ஆலங்குடி கோயில், விராலிமலை முருகன் கோயில், வயலூர் முருகன் கோயில் உள்ளிட்ட இடங்கள் சுற்றுலாப்பயணிகள் தவறவிடக் கூடாதவை. ஆனால், இவற்றை ஓரிரு நாள்களில் கண்டுகளிக்க முறையான சுற்றுலா வரைபடம் (Circuit Map) இல்லாததால், இத்தகைய இடங்களை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளும்கூட தவறவிட்டுவிடுகின்றனர்.
ஆகவே, எளிதில் இத்தகைய இடங்களைச் சென்றடையும் வகையில் மாவட்டச் சுற்றுலா வரைபடத்தை உருவாக்கி, அதை பேருந்து, ரயில் நிலையங்கள், மக்கள் கூடும் முக்கியப் பகுதிகள் ஆகியவற்றில் பார்வையில் படும்படி காட்சிப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும்போது, சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து, அதன் வழியே அந்நியச் செலாவணியும் அதிகரிக்கலாம்.
புதுக்கோட்டையின் சிறப்புகளில் திருமயம் கோட்டையும் ஒன்று. சுமார் 40 ஏக்கர் பரப்பளவில், பாறையின் மேற்பரப்பில் கட்டப்பட்ட ஏழு அடுக்குகளைக்கொண்ட இந்தக் கோட்டை, இயற்கையின் பாதிப்புகளால் சிதைந்துபோய் இப்போது நான்கு அடுக்குகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. தெற்கு, தென்கிழக்கு, வடக்கு என மூன்று திசைகளில் நுழைவு வாயில்களைக்கொண்ட இந்தக் கோட்டையின் உச்சியிலும் நுழைவாயிலிலும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள் வைக்கப்பட்டிருப்பது, அதன் கம்பீரத்துக்குச் சாட்சியாக இப்போதும் விளங்குகிறது. கோட்டையின் அடிவாரத்தில் குடைவரைக் கோயில்கள் இரண்டு இருக்கின்றன. இது போன்று பல சிறப்புகளைக்கொண்டிருக்கும் திருமயம் கோட்டை, பெரிய அளவில் சுற்றுலாப்பயணிகளின் வருகையின்றி வெறிச்சோடியே காணப்படுகிறது. பெரும் சிறப்புகளைக்கொண்டிருக்கும் இந்தக் கோட்டையை, சுற்றுலாப்பயணிகளால் நிரம்பி வழியும்படி செய்ய, `ஒலியும் ஒளியும்’ நிகழ்ச்சிக்குத் திட்டமிடலாம்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்திலுள்ள கோல்கொண்டா கோட்டை, `ஒலியும் ஒளியும்’ நிகழ்ச்சிக்கு (Sound and Light Show) பெயர்பெற்றது. கோட்டையின் முக்கியப் பகுதிகளான குதுப் ஷாஹி டாம்ப் (Qutub Shahi Tomb), பாலா ஹிசார் (Bala Hissar) போன்றவற்றின் சிறப்புகளை விளக்கிய பின்னர், ஆங்கிலேயர்களின் படையெடுப்பிலிருந்து கோட்டையை முகலாயர்கள் எவ்வாறு பாதுகாத்தனர் என்பதையும் சுவராஸ்யமாகக் கூறுகின்றனர். ஒவ்வொரு நிகழ்ச்சியும் குறைந்தப்பட்சம் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக நடக்கிறது. நாள் ஒன்றுக்கு இரண்டு நிகழ்ச்சிகள் வீதம், ஒவ்வொரு வருடமும் மார்ச் தொடங்கி அக்டோபர் வரையிலான மாதங்களில் இரவிலும், நவம்பர் முதல் பிப்ரவரி வரை மாலையிலும் நடத்துகிறார்கள். இது போன்று திருமயம் கோட்டையில், `ஒலியும் ஒளியும்’ நிகழ்ச்சியை நடத்தி, அதற்கென நுழைவுக்கட்டணத்தை நிர்ணயித்து, சுற்றுலாப்பயணிகளிடையே வசூலித்தால் மாவட்டப் பொருளாதாரம் மேம்படுவதோடு, திருமயம் கோட்டையையும் சிறப்பாகப் பராமரிக்கலாம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம், கோபாலபட்டினம் உள்ளிட்ட பகுதிகளைக்கொண்ட கடற்கரை சுமார் 40 கிலோமீட்டர் தொலைவுக்கு இருக்கிறது. இந்தக் கடற்கரையில், ஒரு பீச் ரிசார்ட்டை உருவாக்கலாம். தாய்லாந்தில் புக்கட் (Phuket) கடற்கரையிலுள்ள ‘தனியார் கடற்கரை மன்றம்’ உலக அளவிலான சுற்றுலாப்பயணிகளைக் கவரும் இடங்களில் ஒன்று. அங்கே, கடற்கரையை ஒட்டி எண்ணற்ற பீச் ரிசார்ட்டுகள் இருக்கின்றன. அவற்றில் நீச்சல்குளம், மசாஜ் சென்டர், டிஜே (Disc Jockey), லைவ் கான்சர்ட் (Live Concert), உணவகங்கள், உள்ளூர் பிரத்யேக உணவுகள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சிறப்புப் பகுதிகள் உள்ளிட்டவை அடங்கியிருப்பதால், அவை சுற்றுலாப்பயணிகளின் மனம் கவர்ந்த இடமாக இருக்கிறது.

இதேபோன்று, கோபாலபட்டினம் கடற்கரைப் பகுதியில் ஒரு பீச் ரிசார்ட் அமைக்கலாம். கோபாலபட்டினம் கடற்கரைப் பகுதி, அலைகள் அதிகம் இல்லாத பகுதி என்பதால், இங்கே பீச் ரிசார்ட் அமைப்பது உகந்ததாக இருக்கலாம். அவற்றின் வழியே புதுக்கோட்டை மாவட்டப் பொருளாதாரமும் உயரும்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலங்களைக் காண வெளிநாடுகளிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் வரும் சுற்றுலாப்பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கி, அங்கிருந்தே தங்கள் பயணத்தை ஆரம்பிக்கலாம். இங்கே இருக்கும் ஒன்பது சுற்றுலாத்தலங்களை நான்கு நாள்களில் கண்டு ரசிக்கலாம். விமான நிலையத்திலிருந்து சுமார் 30 நிமிடப் பயண தூரத்தில் 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது ஆவூர் தேவாலயம். அங்கிருந்து 45 நிமிடங்களில் 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது விராலிமலை முருகன் கோயில். அங்கே தரிசனத்தை முடித்துவிட்டு, 45 நிமிடப் பயண தூரத்திலுள்ள (31 கிலோமீட்டர்) சித்தன்னவாசல் குடைவரைக் கோயிலைச் சென்றடையலாம்.
இந்த மூன்று இடங்களையும் ஒரே நாளில் நிறைவுசெய்து, அங்கே இரவு தங்கி இளைப்பாறிவிட்டு, இரண்டாவது நாள் பயணத்தை சித்தன்னவாசலில் தொடங்கி சுமார் 20 நிமிடங்களில் 13 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் குடுமியான் மலை குடைவரைக் கோயிலை அடையலாம். பின்னர், அங்கிருந்து ஏறக்குறைய 18 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் திருக்கோகர்ணம் கோயிலை 30 நிமிடங்களில் வந்தடையலாம். சிறிய இளைப்பாறலுக்குப் பின்னர், மீண்டும் பயணத்தைத் தொடங்கி 37 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் திருமயம் கோட்டைக்குச் சென்று, கோட்டையின் எழிலைக் கண்டு ரசித்து, இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுத்துவிட்டு, மூன்றாம் நாள் பயணத்தை மறுநாள் காலையில் தொடங்கலாம்.

திருமயம் கோட்டையிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில், ஒரு மணி நேரப் பயணத்தில் அறந்தாங்கிக் கோட்டையைக் கண்டு களித்துவிட்டு, அங்கிருந்து 37 கிலோமீட்டர் தூரம் பயணித்து கோபாலப்பட்டினம் கடற்கரையை, சுமார் ஒரு மணி நேரத்தில் அடையலாம். இரவு கடற்கரை ரிசார்ட்டில் தங்கிவிட்டு, அடுத்த நாள் காலை 97 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அதன் கோட்டையையும் பார்த்துவிட்டு, சுமார் ஒன்றரை மணி நேரப் பயண தூரத்திலுள்ள திருச்சி விமான நிலையத்துக்கு வந்து சேரலாம். திட்டமிடப்பட்ட இந்தப் பயண அனுபவத்தை அளிப்பதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்துக்குச் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து, மாவட்டப் பொருளாதாரம் உயரும். அதன் காரணமாக மக்களின் வாழ்க்கைத்தரமும் மேம்படும்!
(இன்னும் காண்போம்)
நம் அடுத்த கனவு கள்ளக்குறிச்சி
மேலும் படிக்க கனவு - 102| `சுற்றுலா’ புதுக்கோட்டை - வளமும் வாய்ப்பும்!