விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி அருகே திருமணமான 40 நாளில் புதுமணப்பெண் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸிடம் பேசுகையில், "விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள பெரியக்கொல்லப்பட்டியைச் சேர்ந்த சக்கையா-பேச்சியம்மாள் தம்பதியரின் மகள் பிரியா (வயது21). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த உறவினர் மகனான செல்வபாண்டியன்(24) என்பவருக்கும் இடையே கடந்த 40 நாள்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது.
புதுமண தம்பதிகளான செல்வப்பாண்டியன் - பிரியா இருவரும் வழக்கம்போல தங்களது பணிகளை கவனித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (07-07-2023) காலையில், உறவினர்கள் அனைவரும் வேலைக்குச் சென்ற பின்னர், வீட்டில் தனியே இருந்த பிரியா தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது. உடலில் பற்றி எரிந்த தீயால், வலியில் பிரியா அலறிய சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனாலும், பலனின்றி பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து இருக்கன்குடி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீஸார், தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட பிரியாவின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பான புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 40 நாள்களிலேயே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதால் இளம்பெண் இறப்பு குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது" என்றனர்.
மேலும் படிக்க திருமணமான 40 நாள்களில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை - சாத்தூரில் அதிர்ச்சி