செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் இன்று தீர்ப்பு!
செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் நடைபெற்றது.
செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர். இளங்கோ, முகுல் ரோஹத்கி ஆகியோர் வாதிட்டனர். அவர்கள் தங்களது வாதத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது சட்ட விரோதமானது எனவும் செந்தில் பாலஜியை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை உள்ளிட்ட வாதங்களை முன்வைத்தனர்.

அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் உள்ள நாட்களை நீதிமன்ற காவல் நாள்களாக எடுத்து கொள்ளக்கூடாது உள்ளிட்ட வாதங்களை முன்வைத்தார்.
இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் கடந்த 27-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு தீர்ப்பளிக்கவுள்ளது.
மேலும் படிக்க Tamil News Live Today: செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் இன்று தீர்ப்பு!