புதிதாக வந்த ஆசிரியர், தன் மாணவச் செல்வங்களைப் பற்றி நன்கு தெரிந்துகொள்வதற்காக... ``நீங்கள் வளர்ந்து என்னவாக விரும்புகிறீர்கள் என்பதை ஒரு பேப்பரில் எழுதுங்கள்'' என்று சொன்னார்.
`இஸ்ரோ சயின்டிஸ்ட், சூப்பர் ஸ்டார், யூடியூபர், டிராவல் ப்ளாகர், டாக்டர், இன்ஜினீயர்' என ஆளாளுக்கு எழுதித் தர, ஒரு மாணவன் மட்டும் இப்படி எழுதி இருந்தான்...
``நான் வளர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்''
ஆசிரியர் அதைப் படித்தவுடன், சக மாணவர்கள் `ஹே..' என அவனைப் பார்த்து சிரித்துவிட, அவன் முகம் வாடியது. ஆசிரியர் அந்த மாணவனிடம், ``நீ என்ன வேலை செய்ய விரும்புகிறாய் என்பதுதானே கேள்வி?'' என்று விளக்கினார். அதற்கு அவன் சொன்னான்...
``எனக்கு மகிழ்ச்சியைத் தரும் வேலையை செய்ய விரும்புகிறேன். அது எந்த வேலையாக இருந்தாலும். பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஓடி, மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டு வாழ்கிறவர்களைப் பார்க்கிறேன். நான் அப்படி வாழ விரும்பவில்லை. அதனாலேயே இப்படி எழுதினேன்'' என்று அந்த மாணவன் சொன்னதும், சிரிப்பை மறந்து சிந்திக்க ஆரம்பித்தனர்.
இந்தச் சம்பவத்தை கேட்ட பிறகு பள்ளி
களில் நாம் இந்தக் கேள்வியை எதிர்கொண்ட தருணம் நம் நினைவுக்கு வந்து செல்லும். அன்று சொன்னது போலவே இன்று நாம் டாக்டராகவும் இன்ஜினீயராகவும்கூட ஆகி இருக்கலாம். ஆனால், அந்த மாணவன் சொன்னதைப் போல் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? `இல்லை' என்பதே பெரும்பான்மையான பதிலாக இருக்கும்.
அமேசானில் அடுத்து என்ன பொருள் வாங்கலாம், என்ன ஆஃபர் இருக்கிறது என தேடிக் கொண்டிருக்கிறோம். விரைவில் ஒரு நாள், மகிழ்ச்சியும் இங்கே விற்பனைக்கு இருக்குமா என தேடும் சூழ்நிலை வந்துவிடும் போல!
இன்றைய வியாபார தந்திரங்களுக்கு அடிமையாகி, அவர்கள் விற்கும் ஒவ்வொரு பொருளின் தேவை மற்றும் அவசியத்தைப் புரிந்துகொள்ளாமல், அநாவசியத்துக்குப் பொருட்களை வாங்கி குவிக்கிறோம். ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம், காம்போ ஆஃபர், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், 50% சேல், ஃபெஸ்டிவ் ஆஃபர் என்று பலவித வண்ணமயமான ஆஃபர்களை வழங்கி தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்கச் செய்வது வியாபாரிகளின் நோக்கம்.
மனிதன் ஒருவன் மேல் மட்டும்தான் அவர்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளை யும் தள்ளி மூட்டை ஏத்தி அனுப்ப முடியும். அவ்வாறு செய்தால் மட்டுமே அவர்கள் போட்ட காசுக்கு லாபம் பார்க்க முடியும். பல வகையான பொருட்களின் உற்பத்தியும் விளம்பரங்களும் மக்களின் மனதை குழப்பிக் கொண்டிருக்கின்றன.
எது அத்தியாவசியம்... எது அநாவசியம் என்று ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மக்கள் எப்போதும் ஒருவித டிப்ரெஷனில் காணப்படுகிறார்கள்.
9-5 வேலை, அலுவலகத்துக்கு அருகில் ஓர் இருப்பிடம், மினிமலிச வாழ்க்கை முறை இதுவே அக்கால மக்களின் தாரக மந்திரமாக விளங்கியது. இதுவே மகிழ்ச்சியான குடும்பங்களுக்கு காரணமாக இருந்தது. சுயநலத்தை காட்டிலும் பொதுநலமே சிறந்தது என்ற நோக்கில் வாழ்ந்தனர் அக்காலத்தினர். ஆனால் இன்று?
`Go Solo - தனிமையை நாடு' என்ற பாதையை நோக்கி நகரத் தொடங்கி விட்டது உலகம். 100 பேருக்கு ஒரு டிவி பெட்டி என்ற முறை போய் ஆளுக்கொரு டிவி என்று செல்போன் ரூபத்தில் கையில் எடுத்துக்கொண்டு சுற்றுகிறார்கள். இதுவே அவர்கள் பொதுநலம் கருதி ஒருவரையொருவர் அனுசரித்து, சகித்து வாழும் முறையை மறக்கச் செய்து, தன் சுகம் மட்டுமே பெரிது என்ற எண்ணத்தை வளர்க்க செய்தது. இந்த சுயநல எண்ணங்கள் மேலான மேற்படிப்பு, வசதியான வேலை வாய்ப்பு, பேசப்படும் சமூக அந்தஸ்து என்று ஏங்க வைத்து, தன் சொந்த மண்ணை விட்டு வேறு பல நாடுகளுக்கு அவர்களை நகரச் செய்கிறது. ஆனால், இந்த நகர்வு அவர்களுக்கு சந்தோஷத்தை அளிக்கிறதா? என்பது நம்முன் நிற்கும் கேள்வி.
லட்சம் லட்சமாகக் கொட்டிக் கொடுக்கும் வேலையோ அல்லது சுய தொழிலோ செய்
தாலும் அது ஒன்று மட்டுமே மகிழ்ச்சியான வாழ்வுக்கு உத்தரவாதம் அளித்துவிடுமா?
சமீப காலங்களில், மக்களின் சிந்தனை `எனது இந்த வேலை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா?' என்பதிலிருந்து மாறி `இந்த வேலை எனக்குத் திருப்தி அளிக்கிறதா?' என்ற கேள்வியை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த மாற்றம் வாழும் முறையிலும் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்பதை நாம் உணரலாம். இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை கண்டுபிடிப்பது சிரமம் என்றாலும் அனுபவித்து உணரக் கூடியதுதான்.
அந்தக் காலத்தில் பொருள் ஈட்டுவதை, வாழ்க்கைக்காக வைத்திருந்தார்கள். இன்றோ... பொருள் ஈட்டுவதே வாழ்க்கையாகி விட்டது. தற்போது நாம் கேட்கும், கடன் தொல்லையால் குடும்பம் தற்கொலை, ஆடம்பர வாழ்க்கையைத் தேடி பெண் ஓட்டம் போன்ற நெகட்டிவ் செய்திகள் அதிகரிப்பதற்கான காரணமும் இதுவே.
லட்சத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ஐடி இன்ஜினீயர், `வேலை வேண்டாம்... விவசாயம் பார்க்க போறேன்' என்று சொல்வதையும் கேட்கிறோம். தனக்கு தகுதியான வேலை கிடைக்கவில்லை... வருமானத்துக்காக ஸ்விக்கியில் டெலிவரி செய்யும் இன்ஜினீயரையும் பார்க்கிறோம்.
இன்றைய காலச்சூழ்நிலையில் வெகு சிலருக்கு மட்டுமே பிடித்த வேலையைச் செய்யும் அதிர்ஷ்டம் கிடைக்கிறது. பலர், காலத்தை ஓட்டுவதற்காக, கிடைத்த வேலையைச் செய்கிறார்கள். பொருள் ஈட்டும் வேட்டையில் அவர்கள் பொருளை பெருமளவு ஈட்டினாலும் ஆரோக்கியம், லட்சியம், குடும்பத்துக்கான நேரம் என்று அதனால் இழந்தது பல. எவ்வளவு சம்பாதித்தாலும் இவை எவற்றையுமே திரும்பப் பெற முடியாது என்பது கசப்பான உண்மை.
`என்னடா வாழ்க்கை இது?' என்று நொந்துகொள்வது வாழ்க்கை இல்லை. வாழ்க்கை எப்போதும், `அட, என்ன ஒரு வாழ்க்கை?' என்று வியந்து பரவசப்படுவது போல் இருக்க வேண்டும். வீடு, கார், பேங்க் பேலன்ஸ் என்று பிள்ளைகளை தங்க சிறையில் வைத்து அழகு பார்க்க விரும்பும் ஜெயிலர் வாழ்க்கை வாழும் நமது வாழ்வு பாதி போனிலும், மீதி லோனிலும் கழிகிறது.
பொன்னும் பொருளும் அவர்களுக்குச் சேர்க்கிறேன் என்று அவர்களுக்குத் தேவையான அன்பு அரவணைப்பைக் கொடுக்கும் நேரத்தைச் சுருக்கிக்கொண்டோம்.
வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பொருள் சேர்ப்பதில் இல்லை. நல்ல நினைவுகளைச் சேர்ப்பதில்தான் இருக்கிறது என்பதை நாமும் உணர்ந்து, சந்ததிகளுக்கும் உணர்த்த வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.
எனவே, கேட்ஜெட்கள் என்னும் தங்க சிறைக்குள் சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரின் வாழ்க்கையை ஜெயிலர் போல் காத்துக்கொண்டு இருக்காமல், மகிழ்ச்சியான நிகழ்வுகளை தைக்கும் டெய்லராக இருந்தாலே போதுமானது.
இயற்கையோடு ஒன்றி வாழ கற்றுக்கொடுத்து அழகான நினைவுகளை சேகரிக்க செய்வோம்!
மேலும் படிக்க நீங்க ஜெயிலரா? டெய்லரா?